''தே.மு.தி.க., ஆட்சிக்கு வந்தால், அரசு பள்ளிகளில் காலை உணவும்
வழங்கப்படும்,'' என, அக்கட்சியின் மகளிர் அணி செயலர் பிரேமலதா பேசினார்.
கடலுார் மாவட்டம், குறிஞ்சிப்பாடி தொகுதி தே.மு.தி.க., வேட்பாளர்
பாலமுருகனை ஆதரித்து, குள்ளஞ்சாவடி மற்றும் நடுவீரப்பட்டில், பிரேமலதா
பேசியதாவது: இப்பகுதியில், மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட
விவசாயிகளுக்கும், மக்களுக்கும் அ.தி.மு.க., அரசு நிவாரணம் வழங்கவில்லை
என்ற குற்றச்சாட்டு உள்ளது.
இங்கு
மழையில் பாதித்தவர்களை, முதல்வர் ஜெ., ஹெலிகாப்டரில் வந்து பார்வையிட்டார்;
தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் ஷூ அணிந்து வந்து பார்வையிட்டார்;
தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் மட்டுமே, சேற்றில் இறங்கிவந்து, மக்களை
சந்தித்து உதவி செய்தார்.
மக்களின் வலியை உணர்ந்தவர் விஜயகாந்த்.
தே.மு.தி.க., ஆட்சிக்கு வந்தால், இத்தொகுதியில் அதிகளவில் விளையும்
முந்திரியை, வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். 60
வயதிற்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு, முதியோர் உதவித்தொகை
வழங்கப்படும்.அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு, காலை உணவும் வழங்கப்படும்;
ஊழலற்ற சிறப்பான ஆட்சி அமைக்கப்படும். இவ்வாறு பிரேமலதா பேசினார்.