மாணவ மனசு! கோடை விடுமுறை- ரமேஷ்பிரபா

ஒரு காலத்தில் கோடை விடுமுறை என்பது மாணவர்கள், பெற்றோர்கள் இருவருமே
ஏங்கித் தவிக்கிற விஷயமாக, எப்போது வரும் என காத்திருக்கும் ஒன்றாக, பலமாத
காலங்களுக்கு முன்பே திட்டமிடுகிற விஷயமாக, குடும்பத்தின் அனைவருமே
கொண்டாடி மகிழுகிற தருணமாக இருந்து வந்தது என்பதில் சந்தேகமேயில்லை. ஆனால்,
இன்று அதே கோடை விடுமுறை இருக்கிறதா என்று கேட்டால், கண்டிப்பாக
இருக்கிறது. ஆனால், குடும்பத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும் வெவ்வேறு விதமான
கோடை விடுமுறையாக அது மாறி சேர்ந்து கொண்டாடி மகிழக் கூடிய ஒரு விஷயமாக
இல்லாமல் போய் விட்டது. அது எப்படி?
ஒரு காலத்தில் இருந்து வந்த கோடை விடுமுறை, இன்றைய கோடை விடுமுறை
இரண்டுமே வீட்டிலுள் மாணவர்களைச் சார்ந்தே இருந்து வருகிறது என்றாலும் கூட
மாணவப் பருவத்தின் காலத்திற்கேற்ற மாறுதல்களால் கோடை விடுமுறை
செலவிடப்படும் விதத்திலும் மாறுதல் ஏற்பட்டிருக்கிறது என்பது தான் உண்மை.
முதலில் இளம் பிராயத்திலிருந்து தொடங்குவோம். விளையாட்டுப் பருவத்தில்
படிப்பைத் தொடங்குகிற டழ்ங் ஓஎ, கஓஎ, மஓஎ போன்ற வகுப்புகளை எடுத்துக்
கொண்டால் இவர்களுக்கு கோடை விடுமுறை சற்று தாமதமாகத்தான் ஆரம்பிக்கவே
செய்கிறது. எட்டாம், ஒன்பதாம் வகுப்புக்கெல்லாம் கூட கோடை விடுமுறை
விட்டுவிடுவார்கள். ஆனால், கஓஎ ஸ்கூலுக்குப் போய்க் கொண்டு இருக்கும். இந்த
வயசு குழந்தைகளை வீட்டில் கட்டி மேய்ப்பது சிரமம் என்பதால் பெற்றோர்களே
இன்னும் கொஞ்ச காலத்துக்கு ஸ்கூல் வையுங்களேன் என்று விரும்பி கேட்டுக்
கொள்வதுதான் காரணம். அப்படி கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டாலும் அந்தக்
குழந்தைகளுக்கு அதே ஸ்கூலிலேயே ‘சம்மர் கேம்ப்’ என்கிற வேறு பெயரில்
தொடர்ந்து வகுப்புகள் நடைபெறுவது வழக்கமாகி விட்டது. அப்படி அந்த ஸ்கூலில்
வகுப்புகள் தொடரவில்லை என்றால் வேறு யாராவது ஒருவர் எங்காவது அந்த வயது
குழந்தைகளுக்கு ஓவியம் சொல்லித்தருகிறேன் நாட்டியம் சொல்லித்தருகிறேன்
என்று திறமை சார்ந்த வகுப்புகள் நடத்துவது இப்போதெல்லாம் கோடையில் சகஜமாகி
விட்டது. இது, சிறு வயது குழந்தைகளின் நேரத்தை சற்று பயனுள்ளதாக்க
பயன்படும் என்றாலும் கூட பல சமயங்களில், இந்த குழந்தைகளை அங்கு கொண்டு போய்
விட்டு விட்டு வகுப்புகள் முடியும் வரை அங்கேயே கூடவே காத்திருந்து
குழந்தைகளை திரும்ப கூட்டி வர வேண்டிய பொறுப்பு நிறைய பெற்றோர்களுக்கு
இருப்பது உண்மை. அப்படிப் பார்க்கும் போது இந்த பெற்றோர்களைப் பொறுத்த வரை
கோடையும் வழக்கமான நாட்களாகவே மாறிவிடுகிறது.
பள்ளியின் தொடக்ககால வகுப்புகள் நிலை இதுவென்றால் பள்ளியில் இறுதிகால
வகுப்பு களான பத்து, பதினொன்று, ‘2 வகுப்புகளை எடுத்துக் கொண்டால்
இவர்களுக்கும் கோடை விடுமுறை கிடையாது என்பதே சமீபத்திய உண்மை. இந்த மூன்று
வகுப்புகளுக்குமே அவர்களது வழக்கமான முந்தைய வகுப்புகளின் அதாவது
ஒன்பதாவது, பத்தாவது, ‘1 தேர்வுகள் முடிந்தவுடனேயே ஒரு பேச்சுக்கு சில
நாட்களுக்கு விடுமுறை கொடுத்து விட்டு மொத்த கோடை விடுமுறை காலத்திலுமே
அடுத்த வருடத்தின பாடங்களை உடனடியாகவே நடத்துகிறேன் என்று அனைத்து
பள்ளிகளுமே புறப்பட்டு விடுவதால் இவர்களில் பெரும்பாலானோரும் கோடை
விடுமுறையை பள்ளிக்கூட பாட நாட்களாகவே செலவிட நேரிடுகிறது.
கோடை விடுமுறையை உண்மையிலேயே அனுபவிக்கிற வாய்ப்பு இன்று யாருக்கு
இருக்கிறது என்று பார்த்தால் ஒன்றிலிருந்து எட்டாம் வகுப்பு வரை படிக்கும்
மாணவர்களுக்கு மட்டுமே என்று சொல்லலாம். ஆனால், அதிலும் நிறைய சிக்கல்கள்
இருக்கிறது. ஒரே வீட்டிலேயே பல்வேறு வகுப்புகள் படிக்கிறவர்களும் இருக்கிற
பட்சத்தில் ஒருவர் அடுத்த வருடத்தில் பாடத்தை ஸ்பெஷல் கிளாஸ் படிக்கிறவராக
இருக்கும் பட்சத்தில் சின்ன கிளாஸ் படிக்கும், தம்பியோ, தங்கையோ தனியாக
விடுமுறையை அனுபவிக்க முடியாமல் சிரமப்படுவதுண்டு. எங்காவது சுற்றுலா செல்ல
முடிவெடுத்தாலும் வீட்டில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஸ்கூல் அட்டவணையை
வைத்துக் கொண்டு திட்டமிட முடியாமல் போய்விடுகிறது. தவிர, இன்று தாய்,
தந்தை இருவரும் வேலைக்குச் செல்வதும் சற்று அதிகமாகிவிட்ட நிலையில்
அவர்களின் அலுவலகத்தில் இருவருக்குமே ஒரே சமயத்தில் லீவு கிடைப்பது அதைவிட
சிரமமான காரியமாகிவிடுகிறது. எனவே குடும்பத்துடன் கோடை விடுமுறை
கொண்டாட்டம் என்பது பள்ளிப் பருவத்தில் சற்று அரிதாகிவிட்டதாகவே சொல்லலாம்.
பள்ளிப் பருவத்தின் நிலை இப்படி இருக்க, கல்லூரி காலத்தின் கோடை
விடுமுறை எப்படி என்பதைப் பார்ப்போம். ‘2 முடித்தவுடன் வருகிற கோடை
விடுமுறை ஒரு புறம் நுழைவுத் தேர்வு கவலைகளிலும், மறுபுறம் எந்த
கல்லூரியில், என்ன பிரிவில் அட்மிஷன் கிடைக்குமோ என்கிற கவலைகளிலுமே
கரைந்து விடுகிறது. அட்மிஷன் கிடைக்கும் முன்பே பல குடும்பங்களில் கல்லூரி
படிப்பு செலவை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்கிற கவலை தொடங்கி விடுகிறது.
கல்லூரியில் சேர்ந்த பிறகும் பொறியியல் பட்டம் படிப்பு, விஷ÷வல்
கம்யூனிகேஷன், எலெக்ட்ரானிக் மீடியா, எம்சிஏ, எம்பிஏ போன்ற படிப்புகளில்
கோடை காலத்தில் இரண்டு மாதங்களுக்கு ஏதாவது ஒரு நிறுவனத்தில் சம்மர்
புராஜக்ட் செய்தாக வேண்டும் என்கிற கட்டாயம் இருப்பதால் சமீப காலத்தில்
இதுவும் ஒரு பெரிய அவஸ்தையாகவே மாறி இருக்கிறது. காரணம் முன்பு ஒரு காலத்தை
ஒப்பிடும்போது சமீப காலத்தில் இது போன்ற பாடப்பிரிவுகளை சொல்லித்தரும்
கல்லூரிகளின் எண்ணிக்கையும் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையும்
அதிகரித்து விட்டதால் இவர்களுக்கு புராஜக்ட் செய்ய நிறுவனங்கள் கிடைப்பது
சிரமமாகி விடுகிறது. கோடை விடுமுறைக்கு சில மாதங்களுக்கு முன்பு தொடங்கிய
இந்த மாணவர்கள் கையில் கல்லூரியின் லெட்டர் ஒன்றை வைத்துக் கொண்டு நிறுவனம்
நிறுவனமாக தங்கள் சம்மர் புராஜக்ட்டுக்கென ஏறி இறங்குவது வழக்கமான
காட்சியாகி விட்டது. எனவே கல்லூரி காலத்திலும் கோடை விடுமுறை என்பது
பாதிநாட்கள் சம்மர் புராஜக்ட் தேடுவதிலும் மீதி நாட்கள் புராஜக்ட் செய்ய
முயற்சிப்பதிலும் என செலவாகிவிடுகிறது.
இவையெல்லாம் ஒரு புறமிருக்க தங்கள் குடும்ப சூழ்நிலை காரணமாகவோ அல்லது
தங்கள் சுயவிருப்பத்தின் பேரில், கோடை விடுமுறையில் ஏதாவது பகுதி நேர
வேலையில் சேர்ந்து சம்பாதிக்கிற மாணவர்களும் உண்டு. இந்த உருப்படியான செயல்
பொருளாதார ரீதியில் இந்த மாணவர்களை உயர்த்துவதோடு, வேறு எந்த தவறான
வழியிலும் போகாமல் இவர்களை பார்த்துக் கொள்வதோடு பல சமயங்களில் இந்த
அனுபவத்தை வைத்து எதிர்காலத்தில் முழு நேர வேலைக்கும் வழி வகுக்கிறது
என்பது உண்மை.
எது எப்படியோ, இருபது, இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்த கோடை
விடுமுறை கொண்டாட்டம் இன்று இல்லை என்பது மட்டும் நிச்சயம். பெற்றோர்களின்
அன்றாட வாழ்க்கை முறைக்கேற்ப, மாணவர்களின் மாறிவரும் கல்வித்
திட்டத்திற்கேற்ப கோடை விடுமுறை என்பதும் பல்வேறு வடிவங்களில் பரிணாம
வளர்ச்சி கண்டிருக்கிறது என்பதை சொல்லலாம். மகிழ்விக்கக் கூடியதாக மட்டுமே
இருந்து வந்த விடுமுறைகள் வாழ்க்கைக்குப் பயனுள்ளதாகவும்
மாறிவந்திருக்கிறது என்பது நல்ல திசை நோக்கிய பயணமே!
கற்போம், கற்பிப்போம்