
தமிழகத்தில் பிறந்து உலகம் வியக்கும் பல கணித முறைகளை உருவாக்கி, கணிதமேதை
என அனைவராலும் போற்றப்படும் ஸ்ரீநிவாச ராமானுஜனின் வாழ்க்கை வரலாறு
ஹாலிவுட்டில் படமாக்கப்பட்டுள்ளது. இந்த படம், 1991ம் ஆண்டு ராபர்ட்
கனிஜெல் எழுதிய " தி மேன் ஹூ நியூ இன்பினிட்டி" (The man who knew
infinity) என்ற புத்தகத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ளது.
ஆலன் டர்னிங், ஸ்டீபன் ஹாக்கிங் போன்ற பெரும்பாலான மேதைகளின் புத்தி
கூர்மைகள் பல சமயங்களில் தவறாக புரிந்து கொள்ளப்பட்டும் அல்லது புரிந்து
கொள்ளப்படாமலும் இருந்துள்ளது. பலதடைகளை தாண்டி இவர்கள் மேற்கொண்ட
கண்டுபிடிப்புக்கள் நமக்கு எத்தகைய மரியாதைக்குரியது, பொக்கிஷம் என்பதை
குறிக்கும் வகையில் கணிதமேதை ராமானுஜனின் வாழ்க்கை படமாக
எடுக்கப்பட்டுள்ளது.
1887 ம் ஆண்டு தமிழகத்தின் ஈரோட்டில் பிறந்த ஸ்ரீநிவாச ராமானுஜனுக்கு சிறு
வயதில் இருந்து அபார கணித ஆற்றல் அமைந்திருந்தது. சிறு வயதில் தனது
உடன்பிறந்தவர்களை பறிகொடுத்த ராமானுஜன், 2 வயதில்அம்மை நோயால் கடுமையாக
பாதிக்கப்பட்டு மீண்டு வந்தார். அவர் பள்ளி வாழ்க்கையில், அவரது
அறிவுக்கூர்மை வெளிப்படத்துவங்கியது. பலருக்கு கடினமாக இருந்த கணிதம் மீது
ராமானுஜனுக்கு தீராத ஆர்வம் உண்டானது. 13 வயதில் அட்வான்ஸ்ட்
டிரிக்னாமெட்ரி பற்றிய புத்தகத்தை படித்து முடித்தார். 15 வயதில் கியூபிக்
ஈக்வேசன் பற்றிய புத்தகத்தையும், அதில் தீர்வுகள் பற்றியும் படித்தார்.
தனது 16வது வயதிலேயே 5000 கணிதசூத்திரங்கள் அடங்கிய புத்தகத்தை அவர்
உருவாக்கினார். இதன் பிறகு பெர்னாலி எண்கள் குறித்து ஆர்வம்
காட்டத்துவங்கினார். 1904ல் கும்பகோணத்தில் உள்ள நகர உயர்நிலைப்பள்ளியில்
கல்வி கற்ற பின்னர், கும்பகோணம் அரசு கல்லூரியில் சேர்ந்தார். அங்கு
கணிதத்தில் மட்டும் கவனம் செலுத்தினார். இதனால் கணிதம் தவிர அனைத்து
பாடங்களிலும் தோல்வியடைந்தார். மற்றொரு கல்வி நிறுவனத்தில் சேர்ந்து பட்டம்
பெற்றார். 1909ம் வருடம் 10 வயதான ஜானகி என்பவருடன் ராமானுஜனுக்கு
திருமணம் முடிந்தது. வேலைதேடிக்கொண்டே மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க
துவங்கினார்.
வி.ராமசாமி ஐயர் தலைமையில் அமைக்கப்பட்ட இந்திய கணித மையத்தில், ராமானுஜன்
தன்னை இணைத்துக்கொண்டு, தனது திறமையை வெளிப்படுத்த துவங்கினார். தொடர்ந்து
இ்ங்கிலாந்து கணித மேதைகளுக்கு கடிதம் எழுத துவங்கினார்.
1913ம் ஆண்டு ராமானுஜனின் திறமைகளை அறிந்த ஜி.ஹச்.ஹார்டி, 1914ம் ஆண்டு
இங்கிலாந்திற்கு ராமானுஜனை அழைத்துச் சென்றார். அடுத்த 5 ஆண்டுகளில்
கேம்பிரிட்ஜில் பல கண்டுபிடிப்புக்களை இருவரும் நிகழ்த்தி, பல புத்தகங்களை
வெளியிட்டனர். 1919ம் ஆண்டு இந்தியா திரும்பிய பிறகு, 1920ம் ஆண்டு
கும்பகோணத்தில் ராமானுஜன் தனது 32வது வயதில் உயிரிழந்தார்.
ராமானுஜனின் மறைவிற்கு பிறகு அவரது திறமைகள், அவருடனான அனுபவங்கள் மற்றும்
கணித உலகை மாற்றிய கண்டுபிடிப்புக்கள் உள்ளிட்டவற்றை ஹார்டி புத்தகமாக
தொகுத்தார். இந்த அனுபவ குறிப்புக்கள், தி ராமானுஜன் ஜோர்னல் வெளியிட்ட
ராமானுஜனின் கண்டுபிடிப்புக்கள் ஆகியவற்றைக் கொண்டே தி மேன் ஹூ நியூ
இன்பினிட்டி என்ற புத்தகம் எழுதப்பட்டுள்ளது.இந்த படத்தில் ராமானுஜனாக தேவ்
பட்டேலும், ஹார்டியாக ஜெர்மி ஐயன்ஸ் நடித்து உள்ளனர். படத்தின் டிரைலர்
வெளியிட்டு பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.
உலகப்புகழ் பெற்ற ராமானுஜன் பற்றி இந்தியாவில் பலருக்கு தெரிந்திருக்க
வாய்ப்பில்லை. இருப்பினும், அவரை பற்றி அறிந்து கொண்டு ஹாலிவுட்டில்
படமாக்கப்பட்ட தி மேன் ஹூ நோ இன்பினிட்டி என்ற ஆங்கில படம், உலகளவில்
வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இந்தியாவில் வரும் 26ம் தேதி வெளியாக
உள்ளது. ராமானுஜன் பற்றி தமிழிலும் கடந்த 2014ம் வருடம் திரைப்படம்
வெளிவந்தது. இந்த படம் சர்வதேச அளவில் வெளியிடப்பட்டது