இணையதள வர்த்தகத்தில் உள்ள, 'கேஷ் ஆன் டெலிவரி' திட்டம் போல், ரயில்
டிக்கெட் முன்பதிவிலும், இதேபோன்ற திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகளில்,
ஐ.ஆர்.சி.டி.சி., ஈடுபட்டுள்ளது.சமீபகாலமாக, மக்கள் தங்களுக்கு தேவையான
பொருட்களை, இணையதள வர்த்தக நிறுவனங்கள் மூலம் தேர்வு செய்து
வாங்குகின்றனர். இவ்வாறு வாங்கப்படும் பொருட்களை, அந்தந்த வர்த்தக
நிறுவனம், நேரடியாக வாடிக்கையாளரின் வீட்டுக்கே சென்று ஒப்படைத்துவிட்டு,
அதற்கான பணத்தை பெற்றுக்கொள்கின்றன. 'கேஷ் ஆன் டெலிவரி' என்னும்
இத்திட்டத்தின் மூலம், வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெறுவதுடன்,
அவர்களின் வர்த்தகமும் அதிகரித்துள்ளது.
இத்திட்டத்தில்,
வாடிக்கையாளர்கள் ஏ.டி.எம்., டெபிட் மற்றும் கிரடிட் கார்டுகளை
பயன்படுத்துவதில்லை. நேரடியாக பணம் கொடுத்து பொருட்களை பெறுகின்றனர். இதை
கருத்தில் வைத்து, இந்திய ரயில்வேயின் உணவு மற்றும் சுற்றுலா கழகமான,
ஐ.ஆர்.சி.டி.சி., ரயில் டிக்கெட் முன்பதிவிலும், 'கேஷ் ஆன் டெலிவரி' வசதி
திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளது. இதற்கான மென்பொருளை
உருவாக்கும் பணியில், ஐ.ஆர்.சி.டி.சி.,
ஈடுபட்டுள்ளது.'கேஷ் ஆன்
டெலிவரி' திட்டத்தின் கீழ் முன்பதிவு செய்யப்படும் டிக்கெட்டுகளை,
பயணிகளின் வீடுகளுக்கு சென்று தருவதற்கான கட்டணத்தையும், ஐ.ஆர்.சி.டி.சி.,
நிர்ணயித்துள்ளது. அதன்படி, படுக்கை வசதி உடைய டிக்கெட்டுக்கான
கட்டணத்துடன், கூடுதலாக, 40 ரூபாயும், ஏ.சி., வகுப்பு டிக்கெட்டுக்கு,
விலையுடன் கூடுதலாக, 60 ரூபாயும் செலுத்த வேண்டியிருக்கும்.
முதற்கட்டமாக,
பாட்னா உள்ளிட்ட, 200 நகரங்களில் இத்திட்டத்தை துவங்க முடிவு செய்யப்பட்டு
உள்ளது. இத்திட்டத்தின் மூலம், பயணிகள், ஐந்து நாட்களுக்கு முன்பாக கூட,
தங்களுக்கு தேவையான டிக்கெட்டுகளை பெறலாம்.
இந்த புதிய திட்டம் அமலுக்கு வரும்போது, டிக்கெட் முன்பதிவு கவுன்டர்களில் காத்திருக்கும் பயணிகள் கூட்டம், வெகுவாக குறையும்.