கல்வியாளர்கள், சமூக நல
ஆர்வலர்கள் என பல்வேறு மட்டங்களிலிருந்தும் அரசு பள்ளிகளுக்கு ஆதரவாக எழுந்த
குரல்கள், தரம்
உயர்த்த வேண்டும்
என்ற அக்கறையான
பேச்சுகள் போன்றவை
சமீப ஆண்டுகளாக
தமிழக அரசுப்
பள்ளிகளின் ஆசிரியர்களையும் கல்வித் துறை அதிகாரிகளையும்
உசுப்பிவிட்டு, அரசுப்பள்ளி மாணவர்களையும் தனியார் பள்ளி
மாணவர்களுக்கு இணையாக 10ம்வகுப்பு மற்றும்
12 ம் வகுப்பு
தேர்வுகளில் ஸ்கோர் செய்ய வைக்கிறது.
அந்த வகையில் திருநெல்வேலி
டவுணில் உள்ள
கல்லணை அரசுப்
பள்ளி, சமீப
கால அரசுப்பள்ளிகளின்
சாதனைகளுக்கெல்லாம் முன்னோடி. இப்பள்ளி
கடந்த பல
ஆண்டு காலமாகவே
கல்வித்தரம், தேர்ச்சி விகிதம், பொதுத் தேர்வில்
அதிக மதிப்பெண்கள்
பெறுவதில் போட்டி
என தனியார்
பள்ளிகளுக்கு ஈடாக அசரடித்து வருகிறது.
தற்போது 10-ம் வகுப்பு
தேர்வு முடிவுகள்
வெளியாகி உள்ள
நிலையில், இந்தப்
பள்ளியில் தங்களது
பிள்ளைகளுக்கு அட்மிஷன் பெற பெற்றோர்களிடையே கடும்
போட்டி காணப்படுகிறது.
அட்மிஷனுக்கு அலைபாயும் பெற்றோர்
இந்தப் பள்ளியில் தங்களது
பிள்ளைகளை சேர்க்க
பெற்றோர் அதீத
ஆர்வம் காட்டுவதால்
கூட்டம் அலைமோதுகிறது.
வி.ஐ.பி-க்களின்
சிபாரிசுக் கடிதங்களுடன் பெற்றோர் பல மணி நேரம் காத்திருந்து
தங்களுடைய குழந்தைகளுக்கு
சீட் வாங்கிச்
செல்கின்றனர். கார்ப்பரேஷன் பள்ளி என்றாலே, இரண்டாம்
தரக் குடிமகனைப்
போல அதனை
ஏளனமாக பார்க்கும்
செயல் சமீப
காலமாக தமிழகத்தின்
பல்வேறு ஊர்களில்
மெல்ல மெல்ல
மாறி வருகிறது.
அதற்கு ஒரு
உதாரணம்தான் நெல்லை டவுனில் உள்ள கல்லணை
மாநகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்
சேர்க்கைக்காக அலைமோதும் பெற்றோர்களின் கூட்டம்.
அதிகாலையிலேயே குவியும் பெற்றோர்
நீண்ட வரிசையில்
காத்திருந்து தங்களது குழந்தைகளை எப்படியாவது இந்தப்
பள்ளியில் சேர்த்துவிட
வேண்டுமே என்கிற
ஆதங்கத்துடன் இருப்பதை நேரில் பார்க்க முடிகிறது.
தமிழகம் முழுவதும் கோடை
விடுமுறைக்குப் பின்னர், பள்ளிகள் ஜூன் முதல்
நாளில் திறக்க
இருப்பதையொட்டி மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
இந்த பள்ளியிலும்
6ம் வகுப்பிறகான
மாணவர் சேர்க்கை
நேற்று தொடங்கியது.
இதனை கேள்விப்பட்டதும்
நெல்லை நகரம்
மட்டும் அல்லாமல்
சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பெற்றோரும் தங்களுடைய
குழந்தைகளை அழைத்துக் கொண்டு பள்ளி வளாகத்தில்
குவிந்தனர். ஒரே சமயத்தில் 700க்கும் அதிகமான
மாணவர்களின் பெற்றோர் பள்ளி வளாகத்தில் திரண்டதால்
பெரும் பரபரப்பு
ஏற்பட்டது.
அந்த கூட்டத்தினரை கட்டுப்படுத்தி
அவர்களை வரிசையில்
நிற்க வைப்பதற்குள்
பள்ளி ஆசிரியர்களுக்கு
போதும் என்றாகி
விட்டது. அங்கு
காத்திருந்த பெற்றோரில் பலர், தங்களது
குழந்தைக்கு சிபாரிசு கடிதத்தை மாநகராட்சி மேயர்
உள்ளிட்ட உள்ளாட்சி
அமைப்புகளின் பிரதிநிதிகளிடம் இருந்தும்,
எம்.எல்.ஏ-க்களிடம்
இருந்தும் பெற்று
வந்திருந்தனர். ஆனாலும், பள்ளி நிர்வாகத்தினர் அனைத்து
மாணவிகளுக்கும் தேர்வு நடத்தி அதில் தேர்வானவர்களை
மட்டுமே சேர்த்தனர்.
இதனால் தங்களது
குழந்தைக்கு இடம் கிடைக்காமல் அதிருப்தி அடைந்த
பெற்றோர், அந்த
வளாகத்தில் நின்றபடியே கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டதால்
சற்று பரபரப்பு
ஏற்பட்டது.
ரேங்க் வாங்கும் பள்ளி!
திருநெல்வேலியில் பல்வேறு இடங்களிலும்
கார்ப்பரேஷன் பள்ளிகள் இயங்கிய போதிலும், இந்த
பள்ளிக்கு மட்டும்
ஏன் அத்தனை
மவுசு? இதற்கான
பதில்தான் இன்று
வெளியான 10ம்
வகுப்புக்கான ரிசல்ட்டில், இந்த பள்ளியை
சேர்ந்த மாணவி
முருகப்பிரியா 497 மதிப்பெண்கள் பெற்று
மாநில அளவில்
மூன்றாம் இடம்
பிடித்தது. மேலும் மாநகராட்சிப் பள்ளிகளுக்கான வரிசையில்
இவர் முதலிடத்தை
கைப்பற்றி இருக்கிறார்.
இந்தப் பள்ளியில் பயிலும்
மாணவிகள் ரேங்க்
வாங்குவது என்பது
கடந்த சில
வருடங்களாக நீடித்து வருகிறது. கடந்த 2010 ல்
இந்த பள்ளி
மாணவி பத்தாம்
வகுப்பு தேர்வில்
முதலிடத்தை கைப்பற்றினார். தனியார் பள்ளிக்கு இணையாக
அரசுப் பள்ளியும்
செயல்பட முடியும்
என மக்கள்
உணரத் தொடங்கிய
தருணம் அது.
அதன்பின்னர் மாவட்ட அளவில் மற்றும் கல்வி
மாவட்ட அளவில்
என ஒவ்வொரு
வருடமும் இந்தப்
பள்ளி மாணவிகள்
ரேங்க் வாங்கியதால்
இந்தப் பள்ளி
மீது பெற்றோரின்
கவனம் திரும்பியது.
கடந்த இரண்டு வருடங்களுக்கு
முன்பு, இந்த
பள்ளி மாநில
அளவில் இரண்டாம்
இடத்தை கைப்பற்றியது.
கடந்த ஆண்டு
இரண்டு மாணவிகள்
மாநில அளவில்
இரண்டாம் இடத்தைப்
பிடித்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு
வெளியான +2 தேர்வு முடிவில், இந்தப் பள்ளிக்கு
மாவட்ட அளவில்
மூன்றாம் இடம்
கிடைத்து உள்ளது.
தற்போது பத்தாம்
வகுப்பு தேர்வு
முடிவில் முருகப்பிரியா
மாநிலத்தில் மூன்றாம் ரேங்க வாங்கி இருக்கிறார்.
சாதனை சாத்தியமானது எப்படி?
கல்லணை மாநகராட்சி மகளிர்
மேல்நிலைப் பள்ளிக்கு பெற்றோரிடம் கிடைத்துள்ள வரவேற்பு
குறித்து அப்பள்ளியின்
தலைமை ஆசிரியை
நாச்சியார் ஆனந்த பைரவியிடம் கேட்டதற்கு, ‘‘இந்தப்
பள்ளியில் கற்றுக்
கொடுக்கும் ஆசிரியர்கள் அனைவருமே கூட்டு முயற்சி
எடுத்து செயல்படுவதால்
மட்டுமே இந்த
சாதனையை நாங்க
எட்ட முடிந்தது.
இங்கு பயிலும்
மாணவிகளில் பெரும்பாலானவர்கள் பொருளாதாரத்தில்
மிகவும் பின்தங்கிய
நிலையில் இருப்பவர்கள்.
அவர்களின் பெற்றோர்
கூலி வேலை
செய்பவர்களாக இருக்கிறார்கள்.
படிக்காத குடும்ப பின்புலத்தில்
இருந்து வருவதால்
ஆரம்பத்தில் இந்த பிள்ளைகளும் படிப்பில் ஆர்வம்
இல்லாமல் இருப்பார்கள்.
ஆனால், அவர்களிடம்
அற்புதமான திறமைகள்
புதைந்து கிடக்கும்.
இதை கண்டுபிடித்து
அந்த மாணவிகளுக்கு
உரிய வகையில்
பயிற்சி அளிப்பதில்
எங்களுடைய ஆசிரியர்கள்
திறமையானவர்கள். நன்றாக படிக்கும் மாணவிகளை உற்சாகப்படுத்தும்
அதே சமயத்தில்,
திறமை குறைவாக
இருக்கும் மாணவிகளையும்
உற்சாகப்படுத்தி அவர்களையும் நல்ல நிலைக்கு கொண்டு
செல்ல பாடுபடுகிறோம்.
இங்கு பயிலும் மாணவிகளுக்கு
அடிக்கடி தேர்வுகள்
நடத்தி அவர்களது
திறமையை மெருகேற்றுவோம்.
அத்துடன் காலை,
மாலை என
இருவேளையிலும் மாணவிகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தி
பயிற்றுவிப்பதால் மட்டுமே இந்த சாதனை சாத்தியமாகிறது.
இப்போது எங்களைப்
பார்த்து தனியார்
பள்ளிகளே பிரமிக்கிறார்கள்.
அவர்கள் எங்களையும்
போட்டியாளர்களாகவே நினைக்கிறார்கள். அதுவும் எங்களுக்கு மகிழ்ச்சியே. அந்த
சவாலையும் நாங்கள்
சமாளிப்போம்’’ என்கிறார் உற்சாகத்துடன்.
அனைத்துப் புகழும் ஆசிரியர்களுக்கே...
பத்தாம் வகுப்பில் மாநிலத்தில்
மூன்றாம் இடம்பிடித்த
முருகப்பிரியா கூறுகையில், ‘‘நான் சாதாரண
குடும்பத்தில் இருந்து
வந்தவள். எனது
தந்தை தனியார்
கட்டுமான நிறுவனத்தில்
கணக்கராக இருக்கிறார்.
என்னால் தனியார்
பள்ளியில் சேர்ந்து
படிக்க முடியாது
என்பதால்தான் இந்த பள்ளியில் சேர்ந்தேன். இங்கு
சேர்ந்த பிறகு
ஆசிரியர்கள் காட்டிய அக்கறையும் அவர்களின் அன்பும்
எனக்கு ரொம்ப
பிடிச்சுப்போச்சு.
அடிக்கடி டெஸ்ட் வச்சு
நம்ம தவறுகளை
சுட்டிக்காட்டுனாங்க. நம்மாலும் மாநில
ரேங்க பெற
முடியும் என்பதை
எனக்கு புரியும்படி
உற்சாகப்படுத்தினாங்க. தினசரி நடத்தும்
பாடத்தை அன்றைக்கே
படித்தாலே போதும்,
நல்ல மார்க்
வாங்க முடியும்
என்பதை ஆசிரியர்கள்
புரிய வச்சாங்க.
அதனால் தினமும்
படிக்க ஆரம்பிச்சேன்.
அதன் பிறகு
என்னை மட்டும்
அல்லாமல் எங்க
வகுப்பில் உள்ள
எல்லோரையுமே ஆசிரியர்கள் தனிக்கவனம் செலுத்தி படிக்க
வச்சாங்க.
ஆசிரியர்கள் இல்லாமல் என்னால்
இந்த சாதனையை
எட்டியிருக்க முடியாது. அடுத்து கம்ப்யூட்டர் பாடத்தை
எடுத்து படிக்க
விரும்புறேன். வருங்காலத்தில் நல்ல கம்ப்யூட்டர் என்ஜினியராக
வர வேண்டும்
என்பதே எனது
ஆசை. எனது
இந்த சாதனைக்கு
உதவிய பெற்றோர்
ஆசிரியர்களுக்கு எப்போதும் நன்றிக் கடன்பட்டு இருக்கிறேன்’’
என்கிறார் நெகிழ்ச்சியுடன்.
இந்த பள்ளியில் 6 ம்
வகுப்பில் மட்டும்
13 பிரிவுகள் இருக்கின்றன. ஆனாலும், அதனையும் மீறி
கூட்டம் அலை
மோதுகிறது. தனியார் பள்ளிக்கு இணையாக சாதிக்கும்
இந்த பள்ளியை
போன்று அனைத்து
அரசுப் பள்ளிகளும்
சாதிக்க தொடங்கி
விட்டால் மட்டுமே
கல்வியை வைத்து
காசு பார்க்கும்
கல்வி வியாபாரிகள்
ஓட்டம் பிடிப்பார்கள்.
இந்த நிலை.
அது சாத்தியமாக வேண்டும்
என்பதே அனைவரின்
எதிர்பார்ப்பு!