விருதுநகர் மாவட்டம் சிவகாசி தாலுகா பி.பாறைப்பட்டியைச் சேர்ந்தவர் சுந்தரி
(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த
மனுவில் கூறியிருந்ததாவது:-
என் மூத்த மகன், எஸ். அம்மாபட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த
கல்வி ஆண்டின் போது எஸ்.எஸ்.எல்.சி. படித்து வந்தான். அரையாண்டுத்தேர்வில்
ஆங்கிலம் மற்றும் கணித பாடத்தில் தோல்வி அடைந்து விட்டான்.என் மகனால்
பள்ளியின் 100 சதவீத தேர்ச்சி பாதிக்கப்படும் என்று கூறி என் மகனை
பள்ளியில் இருந்து தலைமை ஆசிரியர் உமாதேவி வெளியேற்றி விட்டார்.இதுகுறித்து
கலெக்டரிடம் புகார் செய்தேன். இதைதொடர்ந்து மீண்டும் பள்ளியில் என் மகனை
தலைமை ஆசிரியர் சேர்த்துக்கொண்டார்.
என் மகன் சரியாக படிக்கவில்லை என்று
கூறி அவனை பள்ளியில் இருந்து வெளியேற்றியதால் அவன் மன ரீதியாக
பாதிக்கப்பட்டான்.இதனால் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை முழுமனதுடன் அவனால்
எழுத முடியவில்லை. எனவே, இழப்பீடு கேட்டு ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன்.
அந்த வழக்கை தனி நீதிபதி தள்ளுபடி செய்து 11.4.2016 அன்று உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை ரத்து செய்து விட்டு இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிட
வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.இந்த மனு
நீதிபதிகள் நூட்டி ராமமோகனராவ், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் முன்னிலையில்
விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல்கள் ஆர்.அழகுமணி,
எஸ்.ரமேஷ்குமார் ஆகியோர் ஆஜராகி வாதாடினர். மனுவை விசாரித்த நீதிபதிகள்,
இழப்பீடு கோரிய மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று கூறி
அந்த மனுவை முடித்து வைத்தனர்.
மேலும் விசாரணையின் போது நீதிபதிகள் கூறியதாவது:-
100
சதவீத தேர்ச்சிக்காக மாணவர்களை கட்டாயப்படுத்தி வெளியேற்றக் கூடாது.
நன்றாக படிக்காத மாணவர்களை கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களாக
உருவாக்க வேண்டியது தான் ஆசிரியர்களின் கடமையாக இருக்க வேண்டுமே தவிர, 100
சதவீத தேர்ச்சி என்ற ஒன்றை மட்டுமே குறிக்கோளாக கொண்டு மாணவர்களை
வெளியேற்றுவது கூடாது. நன்றாக படிக்காத மாணவர்களுக்கு எப்படி கல்வியை
போதிப்பது என்று ஏற்கனவே பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. அதை
முறையாக ஆசிரியர்கள் செயல்படுத்த வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.