அரசு பள்ளிகளில் 2,316 சிறப்பு ஆசிரியர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை
தேர்வு செய்ய தேர்வு வாரியம் தாமதம் செய்து வருவதாக புகார்
எழுந்துள்ளது.அரசு பள்ளி இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்கள்,
பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்சிப்
பள்ளி விரிவுரையாளர்கள், முதுநிலை விரிவுரையாளர்கள், உதவி தொடக்கக் கல்வி
அலுவலர்கள் ஆகியோர் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு
செய்யப்படுகின்றனர்.
அரசின் ஒப்புதல்
இந்த
நிலையில், 1,254 சிறப்பு ஆசிரியர் (தையல், ஓவியம், உடற்கல்வி, இசை
ஆசிரியர்கள்) பணியிடங்கள், 1,062 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் என
மொத்தம் 2,316 காலியிடங்களை போட்டித் தேர்வு மூலம் நிரப்ப பள்ளிக்கல்வித்
துறை கடந்த ஆண்டு முடிவு செய்தது.இதற்கு அரசின் ஒப்புதலும் பெறப்பட்டு
பாடப்பிரிவுகள் வாரியாக காலியிடங்கள் பட்டியலும் ஆசிரியர் தேர்வு
வாரியத்திடம் உடனடியாக ஒப்படைக்கப்பட்டது. இதில், சிறப்பு ஆசிரியர்
பிரிவில் உடற்கல்வி ஆசிரியர் பணியில் மட்டும் 632 காலியிடங்கள்
உள்ளன.காலியிடங்கள் பட்டியல் கொடுக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும், போட்டித்
தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு, விண்ணப்ப விநியோகம் போன்ற
ஆயத்தப்பணிகள்கூட இன்னும் தொடங்கப்படவில்லை. இது பள்ளிக்கல்வித் துறை
வட்டாரத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சிறப்பு ஆசிரியர்,
முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிநியமனத்துக்கான அரசாணை வெளியிடப்பட்டு பல
மாதங்கள் ஆகிவிட்டதால் தேர்வுக்கான அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று
பி.எட். முடித்த முதுகலை பட்டதாரிகளும், தையல், ஓவியம், இசை, உடற்கல்வி
ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக்
காத்திருக்கின்றனர்.