அடிக்கடி
மாறி வரும் காலநிலையால், விவசாய சாகுபடி பாதிக்கப்படுவதுடன், மகசூல்
குறைந்து விடுகிறது. எனவே, விதைப்பதற்குரிய காலத்தையும், காலத்துக்கேற்ற
பயிர் குறித்த தகவல்களையும், அவ்வப்போது ஏற்படும் சூழலுக்கு ஏற்ப,
விவசாயிகளுக்கு உடனடியாக வழங்க, ஐதராபாத்தில் உள்ள, 'இக்ரிசாட்' எனப்படும்
சர்வதேச வறண்ட வெப்ப மண்டல பயிர் ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்து
வருகிறது. இதன் ஒருபகுதியாக, இந்த தகவல்களை, நவீன தொழில்நுட்ப உதவியுடன்,
உடனுக்குடன் மொபைல் போன் மூலம், உள்ளூர் மொழிகளில் விவசாயிகளுக்கு வழங்கும்
விதமாக, 'ஆப்' ஒன்று உருவாக்கப்பட்டு உள்ளது.
மைக்ரோசாப்ட்
நிறுவனத்துடன் இணைந்து, இதை பரிசோதனை அடிப்படையில் உருவாக்கி உள்ளது.
இந்த, 'ஆப்' அந்தந்த பகுதியின் தட்பவெப்ப நிலை, மாறுபடும் சூழல், தாங்கி
வளரும் பயிர், அதற்கு ஏற்ற காலம், உள்ளிட்ட தகவல்களை வழங்கவுள்ளது.
முதற்கட்டமாக, தெலுங்கு மொழியில், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த, 10 மாவட்ட
விவசாயிகளுக்கு, தகவல் வழங்கப்பட உள்ளது. இந்த சோதனை வெற்றி பெற்றால், மற்ற
பகுதி விவசாயிகளுக்கும் வழங்க, 'இக்ரிசாட்' அமைப்பு திட்டமிட்டு உள்ளது.