அடுத்த ஆண்டு, 'நீட்' தேர்வு கட்டாயமாகும் நிலையில், தனியார் பள்ளிகளில்,
சிறப்பு பயிற்சி வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன. எம்.பி.பி.எஸ்., மற்றும்
பி.டி.எஸ்.,ஆகிய மருத்துவ படிப்புகளில் சேர, அனைத்து மாநிலங்களிலும்,
அடுத்த ஆண்டு முதல், 'நீட்' எனப்படும் தேசிய பொது நுழைவுத் தேர்வு
நடத்துவது கட்டாயம் ஆகியுள்ளது.
இந்த ஆண்டு மட்டும், நீட் தேர்வை
அனுமதிக்காத மாநிலங்களில், அரசு கல்லுாரிகளில், நீட் தேர்வு இல்லாமல்,
மாணவர்களை சேர்க்க அனுமதிக்கப்பட்டது. ஆனால், அடுத்த ஆண்டும் விதிவிலக்கு
உண்டா என்பது தெரியவில்லை.எனவே, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, தமிழகம்
உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும், அரசு மற்றும் தனியார் மருத்துவக்
கல்லுாரிகளில், நீட் தேர்வு அடிப்படையில் தான், மாணவர்கள் சேர்க்கப்படுவர்
என, எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில், தங்கள் பள்ளி
மாணவர்கள், பிளஸ் 2வில் மட்டுமின்றி, நீட் தேர்விலும் நல்ல மதிப்பெண் பெற
வேண்டும் என, தனியார் பள்ளிகள் விரும்புகின்றன. இதுதொடர்பாக, பல்வேறு
பயிற்சி மையங்களுடன், தனியார் பள்ளிகள் ஒப்பந்தம் செய்துள்ளன.இந்த பயிற்சி
மையங்களின் ஆசிரியர்கள், பள்ளிகளுக்கு சென்று, நீட் சிறப்பு வகுப்புகள்
நடத்த துவங்கியுள்ளனர். சி.பி.எஸ்.இ., பள்ளிகள் மட்டுமின்றி, மெட்ரிக்
பள்ளிகளும் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளன. மேலும், நாமக்கல், ஈரோடு,
திருச்சி, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளில், பிளஸ் 2 ரிசல்ட்டில்
சிறப்பு கவனம் செலுத்தும் பள்ளிகளும், நீட் சிறப்பு வகுப்பை துவங்கியுள்ளன







