இந்தியாவில் டெல்லியிலிருந்து மும்பை வரையிலான இறுதிகட்ட சோதனை ஓட்டத்தில்
இந்தியாவின் அதிவேக டால்கோ ரயில் 150 கிலோ மீட்டர் வேகத்தில்
சீறிப்பாய்ந்து வெற்றிகரமாக வந்தடைந்த நிலையில், மணிக்கு 300 கி.மீ.
வேகத்தில் ரயில் செல்லும் உலகிலேயே நீளமான அதிவேக ரயில்
(புல்லட்) பாதைகளைக் கொண்ட நாடாக சீனா
உருவெடுத்துள்ளது. அந்நாட்டில் உள்ள புல்லட் ரயில் பாதையின் நீளம் 20
ஆயிரம் கிலோ மீட்டரைத் தாண்டியுள்ளது.
நாட்டின் மத்திய பகுதியில் உள்ள ஹெனான் மாகாணத்தின் ஜெங்சூ நகரையும்
கிழக்கு பகுதியில் உள்ள ஜியாங்சு மாகாணத்தின் சுசூ நகரையும் இணைக்கும்
வகையில் புதிய பாதை அமைக்கப்பட்டது. இது நேற்று பயன்பாட்டுக்கு வந்தது. 360
கி.மீ. நீளம் கொண்ட இந்த பாதை, மிக முக்கியமான வடக்கு - தெற்கு பாதைகளை
இணைக்கிறது. இதன்மூலம் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளுக்கிடையிலான பயண
நேரம் கணிசமாகக் குறைகிறது.
குறிப்பாக, ஜியான் மற்றும் ஷாங்காய் நகரங்களுக்கு இடையிலான பயண நேரம் 11
மணியிலிருந்து 6 மணியாக குறையும். மொத்தம் ஒன்பது ரயில் நிலையங்களைக் கொண்ட
இந்த வழித்தடத்தில் மணிக்கு 300 கி.மீ. வேகத்தில் ரயில் செல்லும்.
இதன்மூலம், சீனாவில் உள்ள அதிவேக ரயில் பாதையின் மொத்த நீளம் 20 ஆயிரம்
கிலோ மீட்டரைத் தாண்டி உள்ளது. இதனால் உலகின் நீளமான அதிவேக ரயில் பாதையைக்
கொண்ட நாடு என்ற பெருமை சீனாவுக்கு கிடைத்துள்ளது.
இந்தியா உள்ளிட்ட நாடுகளில் அதிவேக ரயில் பாதை அமைப்பதற்கான பணி
ஒப்பந்தங்களைப் பெற ஜப்பான், சீனா இடையே போட்டி நிலவுகிறது.
இந்நிலையில்தான் மும்பை - அகமதாபாத் இடையிலான அதிவேக ரயில் பாதைக்கான
ஒப்பந்தம் ஜப்பானுக்கு வழங்கப்பட்டுள்ளது. சென்னை, டெல்லி இடையே அதிவேக
ரயில் பாதை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் சீனா ஆய்வு
மேற்கொண்டு வருகிறது.