பழைய ஓய்வூதிய திட்டம் பற்றி அதிகாரிகள் பேசாததால் அரசு ஊழியர்கள் அதிருப்தி.
இதுகுறித்து, சங்க நிர்வாகிகள் கூறியதாவது:அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் மாநில சங்கம்:அரசின் நிதி நிலைமையை எடுத்துரைத்தனர். பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தில், என்ன மாற்றம் செய்யலாம் எனக் கேட்டனர். பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தில், ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு, எந்தவித பாதுகாப்பும் இல்லை என்பதை, ஆதாரங்களுடன் எடுத்துரைத்தோம். எனவே, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.பி.ஆரோக்கியதாஸ், ஒருங்கிணைப்பாளர்,
'டேக்டோ' கூட்டுக் குழு: மத்திய அரசின் திட்டத்திற்கு, முதல்வர் ஜெயலலிதா ஆதரவு தெரிவிக்கவில்லை. லோக்சபாவில், அ.தி.மு.க., - எம்.பி.,க்களின் கோரிக்கை ஏற்கப்படாமலேயே, புதிய ஓய்வூதிய சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.இதனால், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பல பாதிப்புகள் ஏற்படும். மேலும் இது, லஞ்சத்திற்கு வழி வகுக்கும். எனவே, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வர, குழுவிடம் கூறினோம்.
'ஜேக்டோ' கூட்டுக் குழுஒருங்கிணைப்பாளர்: 'புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் குறைகளை நீக்கி, எப்படி தொடரலாம்...' என, குழுவினர் ஆலோசனை கேட்டனர். ஆனால், 'புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டமே தேவையில்லை; அதில்,எத்தனை திருத்தம் செய்தாலும், ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு எந்த பலனும் கிடையாது.'எனவே, பழைய பென்ஷன் திட்டம் தான் ஆசிரியர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் தேவை' என்பதை, உறுதியாக கூறிவிட்டோம்.
எஸ்.என்.ஜனார்த்தனன், மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகம்:தமிழக அரசு ஊழியர்களிடம் பிடிக்கப்படும் பல ஆயிரம் கோடி ரூபாயை, மத்திய அரசின், பி.எப்., ஆணையத்தில் செலுத்த வேண்டும். அந்த தொகையை மீண்டும் பெற, தமிழக ஊழியர்கள் பெரும் சிக்கல்களை சந்திக்க வேண்டியிருக்கும்.இதில், யாருக்கு எவ்வளவு ஓய்வூதியம்கிடைக்கும் என்ற விகிதாச்சாரம் கூட கூறப்படவில்லை. ஊழியர்களின் தொகை, பங்கு சந்தையில் முதலீடு செய்யப்படுவதால், அதன் வருமானம் நிரந்தரமாக இருக்காது. ஊழியர்களுக்கு எப்போது நிதி கிடைக்கும் என்ற உறுதியானதகவல்கள் இல்லை. எனவே, புதிய பங்களிப்பு திட்டமே வேண்டாம் என, கூறி விட்டோம்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.








