அரசு பள்ளிகளில், மொபைல் போனில் பாட்டு கேட்ட தலைமை ஆசிரியர் மற்றும்
ஆசிரியர்களுக்கு, கல்வித் துறை, 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளது. 'அரசு
மற்றும்அரசு உதவி பெறும் பள்ளிகளில், வகுப்பு நேரத்தின் போது, ஆசிரியர்கள்
மொபைல்போன் பயன்படுத்தக் கூடாது; மொபைல் போன் எடுத்து வந்தாலும், தலைமை
ஆசிரியர்களிடம் கொடுத்து விட வேண்டும்' என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
ஆனால், பல அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள்,
வகுப்பறைகளில், மொபைல் போன் பயன்படுத்துவதும், அதன் மூலம் பாட்டு கேட்பது,
'வாட்ஸ் ஆப்'பில் சாட்டிங் செய்வது என, பொழுதை கழிப்பதாக புகார்கள்
எழுந்துள்ளன. திருப்பூர் மாவட்டத்தில், இதுபோன்ற புகார்களை கட்டுப்படுத்த,
சி.இ.ஓ., எனப்படும், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முருகன், தனிப்படை
அமைத்து, ஆய்வுகளை மேற்கொண்டார். வகுப்பு நேரத்தின் போது, ஆசிரியர்கள்
சிலரை மொபைல்போனில், அதிகாரிகள் தொடர்பு கொண்டனர்; ஆசிரியர்கள், மொபைல்
போனில் பேசினர். பல பள்ளிகளில் நடத்திய ஆய்வில், ஆசிரியர்கள் சிலர்,
வகுப்பறையில் மொபைல் போனில், சினிமா பாடல்கள் கேட்ட படியும், சிலர்,
'வாட்ஸ் ஆப்'பில், சாட் செய்ததும் தெரிய வந்தது.இப்படி
கண்டறியப்பட்ட, ஆறு பள்ளிகளுக்கு, சி.இ.ஓ., சார்பில் விளக்கம் கேட்டு,
நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. ஆசிரியர்களின் மொபைல் போனை வாங்கி
வைக்காமலும், வகுப்பறையில் பாடம் நடக்கிறதா என்பதை கண்காணிக்காமலும்
இருந்த, தலைமை ஆசிரியர்களிடமும் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.







