அரசு பள்ளிகளில், பணிக்கு செல்லாமல், 'ஓபி' அடிக்கும் சங்க நிர்வாகிகள்
பட்டியல் தயாரிக்க, கல்வித் துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அவர்கள்
பணியாற்றும் பள்ளிகளில், திடீர் ஆய்வும் நடத்தப்பட உள்ளது.அரசு பள்ளிகளில்
பணியாற்றும், ஐந்து லட்சம் ஆசிரியர்கள்சார்பில், 30க்கும் மேற்பட்ட
ஆசிரியர் சங்கங்கள் உள்ளன.அதிக செல்வாக்கு :
வருவாய் துறை ஊழியர் சங்கங்களைப் போல, ஆசிரியர்
சங்கங்களும் வலுவாக உள்ளன. இந்த சங்கங்கள் நினைத்தால், பள்ளிகளை இயக்கவும்,
மூடவும் முடியும் என்ற நிலை உள்ளது. ஆசிரியர்களுக்கான இடமாறுதல், பதவி
உயர்வில் தலையிடுவது; சாதகமில்லாத அதிகாரிகளுக்கு எதிராக புகார் அனுப்புவது
என, ஒவ்வொரு சங்கமும், ஒவ்வொருவிதமாக செயல்படுகின்றன. அதனால், சங்க
நிர்வாகிகளுக்கு, கல்வித் துறையில் அதிக செல்வாக்கு உள்ளது.இடமாறுதல்
கவுன்சிலிங்கில், அரசியல் செல்வாக்கு உள்ளோருக்கு சமமாக, சில ஆசிரியர்
சங்கங்களின் நிர்வாகிகளும், ஆதிக்கம் செலுத்துவதாக கூறப்படுகிறது.இதனால்,
சங்க நிர்வாகிகள் சிலர், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பள்ளிகளுக்கு, பணிக்கு
செல்லாமல், சொந்த பணிகளையும், சங்க பணிகளையும் பார்ப்பதாக
கூறப்படுகிறது.புகார் : சில ஆசிரியர்கள், தங்களுக்கு பதிலாக, வேறு சிலரை,
'உள் சம்பளத்துக்கு' அமர்த்தி, வருகை பதிவேட்டில் மொத்தமாக கையெழுத்திட்டு,
சம்பளம் பெறுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து, தொடக்க மற்றும்
பள்ளிக்கல்வி அதிகாரிகள் தலைமையில், குழு அமைத்து ஆய்வுநடத்த,
உயரதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். சங்க நிர்வாகிகள் பணியாற்றும்
பள்ளிகளின் பட்டியலும் தயார் செய்யப்படுகிறது; விரைவில், அதிரடி ஆய்வு
நடக்கும் என, தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுகுறித்து, சில
ஆசிரியர்களிடம் விசாரித்த போது, 'பெரும்பாலான சங்க நிர்வாகிகள், பள்ளி
விடுமுறை நாட்களிலேயே, சங்க பணிகளை பார்க்கின்றனர்; அதிகாரிகள்
செயல்பாட்டை, முதலில் ஆய்வு செய்ய வேண்டும்' என்றனர்.







