ஆசிரியர் கல்வி தேசிய கவுன்சில் (என்சிடிஇ), ஆசிரியர்கள் தங்கள் சொத்து விவரக் கணக்குகளை
சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்தியாவில் ஆசிரியர் கல்வி (டிடிஇ), கல்வியியல் கல்வி (பி.எட்.,)
கல்லூரிக்கான அனுமதியை அளிக்கும் அதிகாரம் என்சிடிஇ-க்கு மட்டுமே உள்ளது.
என்சிடிஇ-யின் கீழ் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர் கல்வி மற்றும்
கல்வியியல் (பி.எட்.,) கல்லூரிகள் அனுமதி பெற்று செயல்படுகின்றன.
புதிதாகவும் கல்லூரியைத் தொடங்க ஏராளமான விண்ணப்பங்கள் வந்த வண்ணம் உள்ளது.
என்சிடிஇ-யில் அனுமதி பெற்ற கல்லூரிகளில் போதுமான கட்டுமான வசதிகள்,
மாணவர்களுக்கான இடவசதி போன்ற எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல் இந்தியா
முழுவதும் பல்வேறு கல்லூரிகள் செயல்படுகின்றன.
அனுமதி வழங்குவதில் என்சிடிஇ-யில் பணிபுரிபவர்கள் லஞ்சம் வாங்குவதாக
என்சிடிஇ-க்கு புகார்கள் வருகின்றன. அதேபோல பி.எட்., சீட்டுக்காக ஏராளமான
லஞ்சம் பெறப்படுவதாகவும் கவுன்சிலுக்கு அதிகளவில் புகார்கள் வந்துள்ளன.
புகார்களை அடிப்படையாகக் கொண்டு ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை
என்சிடிஇ எடுக்க இருக்கிறது. அதன் முதல்கட்டமாக என்சிடிஇ, ஆசிரியர்கள்
அனைவரும் தங்கள் முழு சொத்துப்பட்டியலை வெளியிட வேண்டும் என உத்தரவுப்
பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு ஆசிரியர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை
ஏற்படுத்தியுள்ளது.







