
தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் சார்பில் சென்னை, சேப்பாக்கம் விருந்தினர்
மாளிகை அருகில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று உண்ணாவிரத
போராட்டம் நடந்தது. மாநில தலைவர் சிவகுமார் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் கணேசன்
முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் சிறப்பு தலைவர்
கு.பாலசுப்ரமணியன் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி வைத்தார். அவர்
பேசியதாவது:
தமிழக அரசு ஊழியர்களுக்கு 8வது ஊதிய மாற்றம் தாமதமாகி வரும் நிலையில் 25
சதவீதம் இடைக்கால நிவாரணம் உடனடியாக வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய
திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்திட
வேண்டும். ஓய்வூதியம் பெறாத அரசு பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க
வேண்டும். அதன்படி, 1-4-2003க்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு பழைய
ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். நிரந்தர ஊதிய விகிதம் இல்லாத அரசு
பணியாளர்களுக்கு நிரந்தர ஊதிய விகிதம் வழங்க வேண்டும்.
மதுபான கடைகள் மூடப்படுவதால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிகளை
இழந்துள்ளனர். அவர்களுக்கு அரசு துறைகளில் காலி பணியிடங்களில் நிரந்தர பணி
வழங்க வேண்டும். பொது விநியோக திட்டத்திற்கென தனித்துறை உருவாக்கப்பட்டு
அங்கு பணியாற்றும் பணியாளர்களுக்கு டிஎன்சிஎஸ்சி-க்கு இணையான ஓய்வூதியம்
வழங்க வேண்டும்.தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் உள்ள காலி
பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். தமிழ்நாடு
அரசு பணியாளர் சங்கத்தின் மாநில பொருளாளர் சாகுல்அமீது நன்றி கூறினார்.