தமிழக சுகாதாரத்துறை, பிற துறைகளுடன் இணைந்து, டெங்கு நோய் தடுப்பில் சிறப்புக்கவனம் செலுத்தி வருகிறது. மாவட்ட கலெக்டரின் உத்தரவுப்படி, வீடுகள், தனியார் நிறுவனங்கள், பள்ளி, கல்லுாரி போன்ற கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகளில், அரசு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கழிவுகள், குப்பை கூளங்களை சுத்தம் செய்யாத வளாங்களுக்கு, அபராதம் விதித்தும், நோட்டீஸ் கொடுத்தும் எச்சரிக்கை செய்து வருகின்றனர்.
இதன்படி, நேற்று வார இறுதி விடுமுறை முடிந்து, பள்ளிகள் அமைந்துள்ள பகுதிகளில், அனைவருக்கும் கல்வி இயக்ககமான, எஸ்.எஸ்.ஏ.,வின், பி.ஆர்.டி.இ., எனப்படும், ஆசிரியர் பயிற்றுனர்கள் கொண்ட தனிப்படையினர், தமிழகம் முழுவதும் சோதனை நடத்தினர்.
பள்ளி வளாகங்கள் மற்றும் பள்ளிகள் அமைந்துள்ள பகுதிகளில், இந்த சோதனை நடந்தது. அதில், குப்பை தொட்டிகள் உள்ள இடம், குடிநீர் தொட்டியை பராமரிக்காத பள்ளிகள், திறந்த வெளியில் கொசு உற்பத்தியாக காரணமான கட்டமைப்புகள் உள்ள வளாகங்கள் என, ௧,௦௦௦ பள்ளிகளுக்கு எச்சரிக்கை, நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. நோட்டீஸ் பெற்ற பள்ளிகள், வளாகத்தை சுத்தம் செய்து, அதன் அறிக்கையை ஆதாரத்துடன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மற்றும் மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்தில் தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
'தொழிற்சாலைகளுக்கு உத்தரவு
இதற்கிடையில், 'டெங்கு காய்ச்சலை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்' என, தொழிற்சாலைகளுக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியமும் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக, வாரிய உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
• தொழிற்சாலைகள் தங்கள் சுற்றுப்புற பகுதிகளை துாய்மையாகவும், எந்த ஒரு இடத்திலும், தண்ணீர் தேங்காதவாறும் பாதுகாக்க வேண்டும்
• தொழிற்சாலை வளாகம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் தினமும், கொசு மருந்து அடிக்க வேண்டும்
• தொழிலாளர்களிடம், டெங்கு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த, கூட்டங்கள், அறிவிப்பு பலகையில் செய்தி வெளியிடுவது, துண்டு பிரசுரங்களை வினியோகித்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும்
• அரசு உதவியோடு, இலவச மருத்துவ முகாம்கள் நடத்தி, டெங்குவால் பாதிக்கப்பட்டோருக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.








