கன்னியாகுமரி அருகே நிலைக்கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வுமண்டலம் ஓகி புயலாக உருவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கன்னியாகுமரி அருகே 60 கிலோமீட்டர் தொலைவில் ஓகி புயல் உருவாகியுள்ளது. புதிதாக உருவான ஓகி புயலால் தென்மாவட்டங்களில் கனமழை பெய்யுக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென் தமிழகத்தில் கடலோர பகுதியில் மணிக்கு 65 முதல் 75 கிலோமீட்டர் வேகத்தில் காற்றுவீசும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. ஓகி புயல் உருவாகியுள்ளதை அடுத்து கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், தஞ்சை,திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழை பெய்யும் என கூறியுள்ளது. கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது என பாலசந்தர் தெரிவித்துள்ளார்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
புயல் உருவாகி உள்ளதால் கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, ராமநாதபுரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குமரி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
ஒகி புயல் காரணமாக பலத்த காற்று வீசுவதால் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுகின்றன. குமரியில் சுறைக்காற்றுடன் கனமழை பெய்து வருவதால் மக்கள் வெளியே வரவேண்டாம் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தப்பட்டுள்ளது.









