சம வேலைக்கு சம ஊதியம்
வழங்கவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இடைநிலை பதிவுமூப்பு
ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ.
வளாகத்தில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் 23-ந்தேதி(அதாவது நேற்று) முதல்
தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி போராட்டத்தில் ஈடுபட பல்வேறு
மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் நேற்று காலை டி.பி.ஐ. முன்பு
குவியத்தொடங்கினர். இதனால் டி.பி.ஐ. முன்பும், உள்ளேயும் ஏராளமான போலீசார்
பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டனர்.
டி.பி.ஐ. வளாகம் நோக்கி முன்னேறிய இடைநிலை
ஆசிரியர்களை கலைந்து செல்லும்படி போலீசார் தெரிவித்தனர். ஆனால்
போராட்டக்காரர்கள் டி.பி.ஐ. வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில்
ஈடுபட்டனர்.
போராட்டத்தில் இடைநிலை ஆசிரியர்கள்
ஏராளமானோர் பெண்கள் தங்கள் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன்
பங்கேற்றனர். இதனைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கானோரை
போலீசார் கைது செய்து ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் அடைத்தனர்.
இதுகுறித்து இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்க பொதுச்செயலாளர் ராபர்ட் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்திய அரசியலமைப்பு சட்டமும், சுப்ரீம்
கோர்ட்டும் சம வேலைக்கு சம ஊதியம் வழங்கவேண்டும் என்று அறிவுறுத்தி
இருக்கிறது. ஆனாலும் இந்த ஊதிய முரண்பாடுகளால் பெரிதும் பாதிக்கப்படுவது
இடைநிலை ஆசிரியர்கள் தான். இதுதொடர்பாக கடந்த 2016-ம் ஆண்டு 8 நாட்கள்
உண்ணாவிரத போராட்டம் நடத்தினோம்.
அப்போது 7-வது ஊதியக்குழுவில் உள்ள ஊதிய
முரண்பாடுகள் சரிசெய்ய பரிந்துரை செய்யப்படும் என்று அரசு
எழுத்துப்பூர்வமாக அறிவிப்பு கொடுத்ததன்பேரில் போராட்டத்தை கைவிட்டோம்.
ஆனால் இதுவரை அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. கோரிக்கைகள் நிறைவேறும்
வரை நியாயமான போராட்டங்களை நாங்கள் முன்னெடுப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையில் இடைநிலை பதிவுமூப்பு
ஆசிரியர்கள் இயக்க பிரதிநிதிகள் தலைமை செயலகத்துக்கு சென்று அங்குள்ள பள்ளி
கல்வித்துறை அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால்
பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததை தொடர்ந்து, ராஜரத்தினம்
ஸ்டேடியத்திலேயே உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்தனர். போலீசார்
பேச்சுவார்த்தை நடத்தியும் சமரசம் ஆகாத அவர்கள் நேற்று இரவு வரையிலும்
போராட்டத்தை தொடர்ந்தனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...