தொகுப்பூதிய பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய அனைவருக்கும் கல்வி இயக்கக ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர் மற்றும் நாகை மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்க தொகுப்பூதிய
பணியாளர்கள் மே தின சிறப்புக் கூட்டம் நேற்று திருவாரூரில் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்ட உதவித்திட்ட அலுவலர் சங்கரநாராயணன் தலைமையில் இந்த
கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. கபிலன் மற்றும் தமிழரசன்,
பொறியாளர் ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஹரியானா, மணிப்பூர் ஆகிய
மாநிலங்களில் அனைவருக்கும் கல்வித்திட்டத்தில் தொகுப்பூதியத்தில்
பணிபுரிந்தவர்களை பணி நிரந்தரம் செய்துள்ளது.
இதைப்போன்று தமிழகத்திலும் தொகுப்பூதியத்தில் பணிபுரிபவார்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டத்தில் தொகுப்பூதிய பணியாளர்கள் திரளாக பங்கேற்றனர். இந்நிகழ்வினை
நாகை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் நிர்மலா, மணிவண்ணன், திருவாரூர் ரகு,
சுரேஷ், செல்வம் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.
சர்வ சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் திறன் வளர்ப்பு பயிற்சிகள்,
மேம்பாட்டு பணிகள் நடக்கின்றன. இதில், மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர்,
ஒருங்கிணைப்பாளர், வட்டாரக் கணக்காளர், பள்ளி கணக்காளர், கம்ப்யூட்டர்
புரொகிராமர், கம்ப்யூட்டர் பயிற்சி வல்லுனர், கட்டட பொறியாளர், அலுவலக
உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பணியாளர்கள் உள்ளனர். இந்த
திட்டத்தின் கீழ் தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வருபவர்கள், தங்களை பணி
நிரந்தரம் செய்வதற்கு நீண்ட காலமாக கோரி வருகின்றனர் என்பது
குறிப்பிடத்தக்கது.