புதுடில்லி:'இணையதளம் மூலம், 'இ - டிக்கெட்' பெற்று, காத்திருப்பு
பட்டியலில் உள்ளோர், ரயில்களில், டிக்கெட் உறுதி செய்யப்பட்ட பயணியர் வராத
பட்சத்தில், படுக்கை வசதி உள்ள, அவர்களின் இருக்கைகளை பயன்படுத்தலாம்'
என்ற, டில்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவை, உச்ச
நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.பாரபட்சம்காத்திருப்பு பட்டியலில் உள்ள, இ -
டிக்கெட் பயணியர், டிக்கெட் உறுதி செய்யப்படாவிட்டால், ரயிலில் பயணிக்க
முடியாது; அதேசமயம், ரயில்வே கவுன்டரில் டிக்கெட் பெற்று, காத்திருப்பு
பட்டியலில் இருந்தால், அத்தகைய பயணியரை, ரயிலில் பயணிக்க அனுமதிக்கும் நிலை
இருந்தது.இது தொடர்பான வழக்கை விசாரித்த, டில்லி உயர் நீதிமன்றம், 2014,
ஜூலையில் அளித்த தீர்ப்பில், 'காத்திருப்பு பட்டியலில் உள்ள, இ - டிக்கெட்
பயணியர், கவுன்டரில் டிக்கெட் பெற்ற பயணியர் இடையே, பாரபட்சம் பார்க்கக்
கூடாது.'இரு வகை பயணியரும், ரயிலில், உறுதி செய்யப்பட்ட டிக்கெட் வைத்துள்ள
பயணியர் வராத பட்சத்தில், அந்த இருக்கைகளை பயன்படுத்திக் கொள்ளலாம்' எனக்
கூறப்பட்டது.இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், ரயில்வே சார்பில் மேல்
முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு இரு முறை விசாரணைக்கு வந்தபோதும்,
ரயில்வே சார்பில் வழக்கறிஞர் ஆஜராகவில்லை.உத்தரவுஇதையடுத்து, உச்ச நீதிமன்ற
நீதிபதி, மதன் பி.லோகுர் தலைமையிலான அமர்வு, டில்லி உயர் நீதிமன்றம்
பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து, நேற்று உத்தரவு பிறப்பித்தது.
ரயில்வேயின் மனுவை தள்ளுபடி செய்வதாக, நீதிபதிகள் அறிவித்தனர்.