அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் குறித்த, முதல்வரின் பேச்சுக்கு
கண்டனம் தெரிவித்து, 9ம் தேதி, மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம்
நடத்த, அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் கூட்டமைப்பான, 'ஜாக்டோ - ஜியோ' முடிவு
செய்துள்ளது.
ஜாக்டோ - ஜியோ உயர்மட்ட குழு கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது.
ஒருங்கிணைப்பாளர்கள் சுப்பிரமணியன், மோசஸ், தாமோதரன் உள்ளிட்டோர்
பங்கேற்றனர். கூட்டத்தில், முன்னாள் முதல்வர் கருணாநிதி, விரைவில் பூரண
நலம் பெற, வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள்
குறித்து, முதல்வர் பழனிசாமி பேசியதற்கு, கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
முதல்வரின் பேச்சை கண்டித்து, 9ம் தேதி, அனைத்து மாவட்ட
தலைநகரங்களிலும்,கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவு
செய்யப்பட்டது.அதிகாரத்தை தவறாக பயன்படுத்தும், திருவண்ணாமலை மாவட்ட
முதன்மை கல்வி அலுவலர், ஜெயகுமார் மீது, அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால்,
16ல், அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், கண்டனஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவு
எடுக்கப்பட்டது.
மேலும், கோரிக்கைகளை வலியுறுத்தி, செப்டம்பர், 4ல், ஒரு நாள் ஒட்டுமொத்த
தற்செயல் விடுப்பு போராட்டம்; அக்., 13ல், சேலத்தில் வேலைநிறுத்த போராட்ட
மாநாடு; நவ., 27 முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்துவது
என்றும், கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டம் முடிந்த பின்,
முதல்வர் பேச்சை கண்டித்து, கண்டன அறிக்கையையும், கூட்டமைப்பு
வெளியிட்டுள்ளது.







