தொடக்கப் பள்ளிகளில் நிலுவையில் உள்ள பிரச்னைகளை முடிப்பது குறித்து
ஆலோசிக்க, முதன்மைக் கல்வி மற்றும் மாவட்டக் கல்வி அதிகாரிகள் கூட்டம்,
சென்னையில் நடைபெற உள்ளது.
தமிழக அரசின், தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், உள் கட்டமைப்பு
மேம்பாடு, மாணவர் சேர்க்கையை அதிகரிப்பது, 'எமிஸ்' என்ற, மாணவர் விபரங்களை
டிஜிட்டல் தொகுப்பில் சேர்ப்பது என, பல்வேறு பணிகள் போர்க்கால அடிப்படையில்
மேற்கொள்ளப்படுகின்றன.
அதேபோல, ஆசிரியர்களின் நியமனம், பதவி உயர்வு குறித்த பிரச்னைகள், அரசு உதவி
பெறும் பள்ளிகளுக்கான நிர்வாக பணிகள் போன்றவற்றிலும், பல்வேறு
சீர்திருத்தங்கள் செய்யப்படுகின்றன.இந்தப் பணிகளின் நிலைமை என்ன; அவற்றின்
மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து, சி.இ.ஓ.,க்கள் மற்றும்
டி.இ.ஓ.,க்களுக்கு, சென்னையில் ஆலோசனை வழங்கப்பட உள்ளது.
இதற்கான கூட்டம், வரும், 8, 9 மற்றும் 10ம் தேதிகளில் சென்னையில், தொடக்கக்
கல்வி இயக்குனரகத்தில் நடக்கும் என, தொடக்கக் கல்வி இயக்குனர் கருப்பசாமி,
சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.இந்தக் கூட்டத்திற்கு வரும் முன், தங்கள்
மாவட்ட, பள்ளிகளின் வழக்குகள் நிலை, பள்ளி வாரியாக ஆசிரியர் காலியிட
விபரம், உள்பட, 29 வகை பட்டியல்களை, வரும், 6ம் தேதிக்குள்,
deemeetingagenda@gmail.com என்ற முகவரிக்கு அனுப்ப, பள்ளிகள்
அறிவுறுத்தப்பட்டு உள்ளன.







