முழு பாதுகாப்பு அம்சத்துடன் கணினி வழி தேர்வு டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு
டி.என்.பி.எஸ்.சி., யின் கணினி வழி தேர்வு, அனைத்து வகையான பாதுகாப்பு அம்சங்களுடன் நடத்தப்படும்,'' என, டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. டி.என்.பி.எஸ்.சி.,யின், 'குரூப் - 1' தேர்வு தொடர்பாக, நீதிமன்றத்தில் வழக்குகள் உள்ளன. இந்நிலையில், தேர்வில் முறைகேடுகளை தடுக்கவும், தேர்வை விரைந்து முடிக்கவும், கணினி வழி தேர்வை, டி.என்.பி.எஸ்.சி., நடத்த உள்ளது.இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., செயலர் நந்தகுமார் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, சுதன் ஆகியோர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:டி.என்.பி.எஸ்.சி.,யின் கணினி வழி தேர்வு என்பது, 'ஆன்லை' முறையில் நடக்காது. விண்ணப்பங்கள் மட்டுமே ஆன்லைனில் பெறப்படும்.
மாவட்ட வாரியாக, டி.என்.பி.எஸ்.சி., அமைக்கும், கணினி தேர்வு மையங்களில், அதிகாரிகள் முழு கட்டுப்பாட்டில், கண்காணிப்பு கேமராக்களின் பதிவுடன், கணினி வழியில் தேர்வு நடக்கும்.
இதனால், எந்த முறைகேடுகளுக்கும் வாய்ப்பில்லை. முதற்கட்டமாக, அதிகபட்சம், 50 ஆயிரம் பேர் வரை பங்கேற்கும் தொழில்நுட்ப தேர்வை மட்டும், கணினி வழியில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான, வினாத்தாள்கள், தேர்வு நடப்பதற்கு சிறிது நேரத்துக்கு முன், அந்தந்த மையங்களுக்கு அனுப்பப்படும். தேர்வு மையங்கள் மற்றும் தேர்வு அறைக்குள், வேறு யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்
தேர்வர்கள் எந்த கணினியை பயன்படுத்துகின்றனர்; தேர்வின் போது, விடைகளை தேர்வு செய்ய, தேர்வர்கள் தங்கள் கணினியின் மவுசை இயக்கும் விதம் உட்பட அனைத்தும், கணினியில் பதிவு செய்யப்படும்
தேர்வின்போது, தேர்வர்களின் கணினி செயல்பாடுகளை அவர்களின் விருப்பத்தின்படி, தகவலாகவும் வழங்க முடியும்.வினாத்தாள் அமைப்பு, விடை திருத்தம், தரவரிசை பட்டியல் தயாரிப்பு போன்றவை, டி.என்.பி.எஸ்.சி.,யால் முழு பாதுகாப்புடன் மேற்கொள்ளப்படும். இந்த பணிகள், தனியாரிடம் ஒப்படைக்கப்படாது
சிவில் சர்வீசஸ் தேர்வு நடத்தும், யு.பி.எஸ்.சி., அமைப்பும், பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகள் போன்றவை ஏற்கனவே, ஆன்லைனில் தேர்வுகளை நடத்தி வருகின்றன
டி.என்.பி.எஸ்.சி., சார்பில், 2012 முதல், 2015 வரை, 27 தேர்வுகள் கணினி வழியில் நடத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது








