அரசு மற்றும் நிதியுதவி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் ஸ்மார்ட் கார்டு திட்டம் காலதாமதமாவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில், இந்த கல்வியாண்டில் அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகளில் புதிதாக சேர்ந்த மாணவர்களின் விவரங்கள் உடனுக்குடன் இஎம்ஐஎஸ் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர். இந்த கல்வியாண்டு தொடங்கி 3 மாதங்கள் முடிந்து தற்போது 4வது மாதம் தொடங்கியுள்ளது. இருப்பினும் பல மாவட்டங்களில் மாணவர்களின் விவரங்கள் பதிவு செய்வது தொடர் காலதாமதமாவதாக புகார் எழுந்துள்ளது. அதாவது பெரும்பாலான அரசு தொடக்கப்பள்ளிகளில் கம்ப்யூட்டர்கள், இன்டர்நெட் வசதியும் இல்லாமல் ஆசிரியர்கள் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.
இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: அரசு மற்றும் நிதியுதவி பள்ளிகளில் முதல் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் விவரங்கள் கடந்த ஆண்டு முதல் பதிவு செய்யப்பட்டு வருகிறது. தற்போது இந்த கல்வியாண்டில் சேர்ந்த மாணவர்களின் விவரங்கள் பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். ஆனால் எங்களுக்கு என்று தனியாக கணினி ஆசிரியர்கள் இல்லை. இங்கிருக்கும் ஓரிரு ஆசிரியர்களும் கணினி தெரிந்த ஆசிரியர்கள் இல்லை. இதனால் நாங்கள் அருகில் உள்ள வேறு பள்ளி ஆசிரியர்களிடம் கொடுத்து பதிவு செய்ய வேண்டிய நிலை உள்ளது.
மேலும் கணினி தெரிந்த ஆசிரியர்கள் இருந்தாலும் பள்ளியில் கம்ப்யூட்டர்கள், இன்டர்நெட் வசதி இல்லை. இதனால் தனியார் இன்டர்நெட் மையத்திற்கு சென்று பதிவு செய்ய வேண்டி உள்ளது. மாநிலம் முழுவதும் இதுவரை 90 லட்சம் மாணவர்களுக்கு மேல் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது 90 சதவீதமாகும். இந்த பணி நூறு சதவீதம் முடியாமல் உள்ளதால் ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணி தொடர்ந்து காலதாமதமாகிறது. இந்த பணி முடிந்தவுடன், ஸ்மார்ட் கார்டு மாணவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஸ்மார்ட் கார்டால் என்ன பயன்?
இந்த திட்டம் பள்ளி மாணவர்களின் அடையாள அட்டையாக மட்டும் அல்லாமல் கல்வித்துறையில் டிஜிட்டல் வளர்ச்சிக்கான நகர்வாகவும் கருதப்படுகிறது. இந்த கார்டில் பயிலும் மாணவர்களின் புகைப்படம், ரத்த வகை, முகவரி, குடும்ப விவரம், ஆதார் விவரம் இடம் பெற்று இருக்கும். ஸ்மார்ட் கார்டுகளை பயன்படுத்தி மாணவர்களின் தேர்வு மதிப்பெண்கள் போன்றவற்றை அறிந்து கொள்ளலாம். மேலும் ஆசிரியர்கள் குறித்த விவரம் உள்ளிட்டவை குறித்தும் அறிந்து கொள்ளலாம். பள்ளிகளில் மாற்று சான்றிதழ் முறைக்கு தேவை இருக்காது. ஒருங்கிணைக்கப்படும் தகவல்கள் மூலம் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளிட்ட விவரங்கள் பெறப்பட்டு தீர்வு காண வழிவகை ஏற்படும்