ஈரோட்டில் பள்ளி விழாவில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
அனைத்துத் துறைகளிலும் தமிழகம் முன்னோடி மாநிலமாகத் திகழ்ந்து வருகிறது. தமிழக அரசைப் பொருத்தவரை எந்தப் பள்ளியையும் மூடும் எண்ணம் இல்லை.
அதே நேரத்தில் பள்ளிகளில் 2, 3 மாணவர்கள் இருந்தால் அதன் நிலை என்ன என்பதை அரசு ஊழியர் சங்கங்கள்தான் எங்களுக்குக் கூற வேண்டும். ஓர் ஆசிரியருக்கு எவ்வளவு செலவு ஆகிறது, அங்குள்ள பல்வேறு பணியாளர்களுக்கு எவ்வளவு செலவு ஆகிறது, 2 மாணவர்கள் படித்தால் ஓர் ஆண்டுக்கு ஆகும் மொத்தச் செலவு எவ்வளவு என்பதை அவர்கள்தான் கூறவேண்டும்.
கஜா புயலால் ஒரு சில இடங்களில் பள்ளி மாணவர்களின் பாடப் புத்தகங்கள் சேதம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நிவாரணப் பணிக்காக தஞ்சை மாவட்டத்துக்கு என்னை முதல்வர் நியமித்துள்ளார். அங்கு சென்று நேரில் ஆய்வு செய்த பின்னர் எவ்வளவு பாடப் புத்தகங்கள் சேதம் அடைந்திருந்தாலும் அதை வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும்.
சேத விவரங்கள் எவ்வளவு என்பதை நேரில் சென்று ஆய்வு செய்த பின்னர்தான் கூற முடியும் என்றார்








