(S.Harinarayanan)
புகை, தூசு, ஒவ்வாத பொருட்கள் போன்றவற்றால் ஏற்படும் அலர்ஜி காரணமாகவும்
மழை, குளிர்காலங்களிலும் சிறு குழந்தைகளுக்கு அடிக்கடி சளி பிடிப்பதோடு,
ஆஸ்துமாவாலும் வீசிங் பிரச்னை ஏற்பட்டு மூச்சுவிடுவதில் மிகவும்
சிரமப்படுகிறார்கள்.
ஒவ்வாமை எனும்போது, உணவு சார்ந்த ஒவ்வாமை, தூசு மூலமாக ஏற்படும் ஒவ்வாமை,
மகரந்தங்களால் ஏற்படும் ஒவ்வாமை எனப் பல வகைகள் இருக்கின்றன. இவை
அனைத்துமே, ஒருவரின் நோய் எதிர்ப்பு சக்தியைப் பொறுத்தே பாதிப்பை
ஏற்படுத்தும். சில குழந்தைகளுக்கு இயல்பாகவே நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக
இருக்கும். சிலருக்கு, மிகவும் குறைவாக இருக்கும். அதேவேளை, ஒவ்வாமை
அதிகரிக்கும் சூழலில், மெல்லிய சத்தத்துடன் `வீசிங்' (மூச்சுத்திணறல்),
நெஞ்சு இறுக்கம் போன்றவை ஏற்பட்டால், அதை `ஆஸ்துமா' என்கிறார்கள்
மருத்துவர்கள். ஆனாலும், ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல்
எவ்வளவு தீவிரமாக இருந்தாலும், அதை `ஆஸ்துமா' எனக் குறிப்பிடுவதில்லை.
அதை, `ஒவ்வாமைப் பிரச்னை' என்றும் அது தானாகவே சரியாகிவிடும் என்றும்
சொல்கிறார்கள்.
இதற்கு மூக்கினால் உறிஞ்சக்கூடிய இன்ஹேலர் (Inhaler), வாயினால்
உறிஞ்சக்கூடிய இன்ஹேலர் (Oral inhaler) மற்றும் நெபுலைசர் (Nebulizer)
போன்றவற்றின் மூலம் மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. இவை நுரையீரலில்
நேரடியாகச் செயல்பட்டு மூச்சுக்குழாயில் ஏற்படும் வீக்கத்தையும்
எரிச்சலையும் கட்டுப்படுத்துவதால், குழந்தைகள் சிரமமின்றி மூச்சுவிட
முடியும்.
உடலில் ஒவ்வாமை ஏற்பட்டால், நோய் எதிர்ப்பு சக்தி ஒன்றுசேர்ந்து அவற்றை எதிர்க்கத் தொடங்கும். அதேநேரத்தில், ஒவ்வாமையை
அதிகப்படுத்தும் விதமாக, `இம்யூனோகுளோபலின் ஈ' (IGE) மற்றும் `மேஸ்ட்
செல்ஸ்' (Mast cells) எனப்படும் செல்கள் அதிகமாக உற்பத்தியாகி, அவை உடலில்
சில மாற்றங்களை வேகமாக ஏற்படுத்தும். இப்படி `இம்யூனோகுளோபலின் ஈ' அல்லது
`மேஸ்ட் செல்கள்' அதீதமாக வெளியாகும்போது, குறிப்பிட்ட இடத்தில் அவை சேரத்
தொடங்கும். குறிப்பாக, அந்த செல்கள் மூக்கில் அதிகமாகத் தங்கினால்,
வேகமாகத் தும்மல் வரும். தோலில் சேர்ந்தால் நமைச்சல் ஏற்படும். நுரையீரலில்
சேர்ந்தால் மூச்சுத்திணறல் ஏற்படும்.
இப்படி ஒவ்வொரு பகுதியிலும் சேரக்கூடிய `மேஸ்ட் செல்கள்' அனைத்தும்,
ஒருகட்டத்தில் மூச்சுக்குழாயைச் சுருக்குவதுடன் நுரையீரலைத்
தடிமனாக்கும். அத்தகைய சூழலில், சுவாசிக்கும்போது உள்ளிழுக்கப்படும் காற்று
முழுமையாக வெளியே வரமுடியாமல் மூச்சுத்திணறலை ஏற்படுத்தும். இப்படியான
சூழலில் சற்று தாமதமாக மெல்லிய ஒலியுடன் காற்று வெளிவரும். அதுதான்
`வீசிங்' எனப்படுகிறது. ஒவ்வாமை அதிகரிக்கும்போது, சரியாக
மூச்சுவிடமுடியாத சூழல் உருவாகி மூச்சுத்திணறலை அதிகரிக்கும். அப்போது,
'சால்புட்டமால்' (Salbutamol) போன்ற மாத்திரைகள் மூலம், தடிமனான நுரையீரலை
இயல்பு நிலைக்குக் கொண்டுவர வேண்டும். மீண்டும் அத்தகைய சூழல் ஏற்பட்டால்,
மறுபடியும் மருந்து எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும்.
மூக்கினால் உறிஞ்சக்கூடிய இன்ஹேலர், நெபுலைசர் போன்றவற்றால் எந்த
பக்கவிளைவோ, பாதிப்போ ஏற்படாது. இவை குழந்தைகளுக்கு மிகவும்
பாதுகாப்பானவை. மாறாக வாயில் உறிஞ்சக்கூடிய இன்ஹேலர்களிலும் (Oral
inhalers), உள்ளே கொடுக்கும் மாத்திரைகளிலும் கார்ட்டிகோ ஸ்டீராய்டுகள்
உள்ளன. இந்த ஸ்டீராய்டு மருந்துகளை தொடர்ந்து 6 மாதங்களுக்கு மேல்
எடுத்துக் கொள்ளும் பச்சிளம் குழந்தைகளுக்கும் (Infants), 2 முதல் 5
வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கும் பக்கவிளைவுகள் ஏற்படக்கூடும்.
இந்த மருந்துகள் அப்போதைக்கு குழந்தைகளை மூச்சுவிடுவதில் உள்ள
சிரமத்திலிருந்து விடுவித்தாலும், எலும்புகளின் வளர்ச்சியைக் குறைக்கிறது.
அவர்களின் வளர்ச்சி விகிதத்தையும் பாதித்து உயரத்தைக் குறைக்கிறது. வளரும்
பருவத்தில் ஆரோக்கியமான மற்ற குழந்தைகளைவிடவும் உயரம் குறைந்தவர்களாகவே
இருப்பார்கள்.
ஸ்டீராய்டு மருந்துகளின் நீண்ட நாள் உபயோகத்தால் இக்குழந்தைகளின் நோய்
எதிர்ப்பு சக்தி குறைந்து அடிக்கடி நோய்வாய்ப்படுவார்கள். அடிக்கடி தொற்று
நோய் பாதிப்புக்குள்ளாவார்கள். எனவே, மருத்துவரின் ஆலோசனையின்றி ஓரல்
இன்ஹேலர்ஸ், மாத்திரைகள் போன்றவற்றை குழந்தைகளுக்கு கொடுப்பதை தவிர்க்க
வேண்டும்.’’ ஸ்டீராய்டு மருந்துகளின் நீண்ட நாள் உபயோகத்தால்
இக்குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து அடிக்கடி
நோய்வாய்ப்படுவார்கள்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...