புதுக்கோட்டை,ஜன.7: ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்திட்டத்தின் கீழ்
புதுக்கோட்டை வருவாய் மாவட்டத்தில் பயிலும் உயர்நிலை மற்றும்
மேல்நிலைப்பள்ளியில் 9ஆம் வகுப்பு படிக்கும் மீத்திறன் மிக்க 60 மாணவர்கள்
தேர்வு செய்யப்பட்டு அவர்களை அயல்மாநிலத்தில் உள்ள உயர் அறிவியல்
மையங்களுக்கு கல்விச் சுற்றுலாவுக்கு அனுப்பி வைக்கும் நிகழ்வு
புதுக்கோட்டை அருள்மிகு அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது..
மாணவர்களை புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா வழியனுப்பி
வைத்து பேசியதாவது:ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்திட்டத்தின் கீழ்
புதுக்கோட்டை வருவாய் மாவட்டத்தில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்
பள்ளிகளில் 9 ஆம் வகுப்பு பயிலும் மீத்திறன் மிக்க மாணவர்கள் 60
பள்ளிகளில் இருந்து 60 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு கல்விச்
சுற்றுலாவுக்கு செல்கின்றனர்..10 மாணவர்களுக்கு ஓர் வழிகாட்டி ஆசிரியர்
வீதம் 6 ஆசிரியர்கள் இம்மாணவர்களை வழிநடத்துவர்..இம்மாணவர்கள் பெங்களூரில்
உள்ள விஷ்வரேஸ்வரய்யா தொழில்நுட்ப தொழிலக அருங்காட்சியகம்,இந்திய தொழில்
நுட்ப கழகம்,கர்நாடக சட்டப் பேரவை உள்ளிட்ட வரலாற்று சிறப்பு மிக்க பல
இடங்களை பார்வையிட்டு ஜனவரி 10 ஆம் தேதி காலை புதுக்கோட்டை வருவார்கள்.இது
போன்ற வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு மாணவர்களை கல்விச் சுற்றுலா
அழைத்துச் செல்வதன் மூலம் மாணவர்களின் படைப்பாற்றல் திறன்,சிந்தனைத் திறன்
அதிகரிக்கும் என்றார்.
நிகழ்வின் போது ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்திட்டத்தின் மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் சி. பழனிவேலு உடன் இருந்தார்..
மாணவர்களின் வழிகாட்டி ஆசிரியர்களாக
ராஜா,பாலகிருஷ்ணன்,கீதா,பிரேமா,தாஜ்மவுல் ஆகியோர்
செல்கின்றனர்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைந்த
பள்ளிக்கல்வித்திட்டத்தின் மாவட்ட உதவித்திட்ட ஒருங்கிணைப்பாளர்
சி.பழனிவேலு தலைமையில் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள்
சி.பன்னீர்செல்வம்,க.ராஜா ஆகியோர் செய்துள்ளனர்.