தமிழக பள்ளி கல்வித்துறையின் சமச்சீர் பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் 1-இல் தொடங்கி 29-ஆம் தேதியுடன் நிறைவடைந்தன.
இந்த நிலையில், பிளஸ் 1 விடைத்தாள் திருத்தும் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. பெரும்பாலான தேர்வு முகாம்களில் விடைத்தாள் திருத்தும் பணிகள் திங்கள்கிழமை நிறைவு பெற்றன. வேலுர் உள்ளிட்ட சில மாவட்ட மையங்களில் மட்டும் விடைத்தாள் திருத்தும் பணிகள் செவ்வாய்க்கிழமை முடிவடையவுள்ளது.
இதையடுத்து மதிப்பெண்கள் பதிவேற்றம் மற்றும் தற்காலிக சான்றிதழ் தயாரிக்கும் பணிகளை தீவிரப்படுத்த தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது. மேலும், ஏற்கெனவே அறிவித்தபடி பிளஸ் 1 தேர்வு முடிவுகள் மே 8-இல் வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.








