மத்திய அரசின் அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ்
ஆசிரியர்களுக்கு மாதம்தோறும் எந்தவித தாமதமும் இல்லாமல் ஊதியம் கிடைக்க
அவர்களுக்கான தொடர் நீட்டிப்பு ஆணையை நிரந்தரமாக வழங்க வேண்டும் என்ற
கோரிக்கை எழுந்துள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்த அனைவருக்கும் கல்வி திட்டம் (எஸ்எஸ்ஏ) கடந்த
2000-ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைமுறைக்கு வந்தது. தொடக்கக் கல்வியை
மேம்படுத்தும் நோக்கில் கொண்டு வரப்பட்ட இந்தத் திட்டம் 10 ஆண்டுகள்
நீடிக்கும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து
2010-ஆம் ஆண்டு இந்த திட்டம் மேலும் நீட்டிக்கப்பட்டது. இந்தத்
திட்டத்துக்காக மத்திய அரசு மூலம் ஆண்டுதோறும் ரூ.1,400 கோடி அளவுக்கு நிதி
வந்து கொண்டு இருக்கிறது.
இவர்களுக்கான மாத சம்பளம் என்பது ஒவ்வொரு மாதமும் மேற்கண்ட திட்ட அதிகாரிகள் மூலம் பட்டியல் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த 10 ஆண்டுகளாக தொடரும் சிக்கல்: மேற்கண்ட இரண்டு திட்டங்களின் கீழ்
செயல்படும் பள்ளிகள் தரம் உயர்த்தப்படும் போது, அந்தப் பள்ளிகளில் புதியதாக
தலைமை ஆசிரியர்கள், வகுப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும் அல்லது
அதில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். இந்த
இரண்டு விஷயங்களும் முறையாக நடைபெறவில்லை. அதனால் சம்பளம் வழங்கும் போது
பட்டியல் தயாரிப்பதில் கால தாமதம் ஏற்படுகிறது. 10 ஆண்டுகள் கடந்த
நிலையிலும் நிரந்தர ஆசிரியர்களுக்கு, தற்காலிகப் பணியிடத்துக்கான தொகையை
கணக்கிட்டு சம்பளமாக வழங்கி வருகின்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் தலைவர் இளமாறன் கூறியது: இந்தச்
சம்பளம் பல்வேறு கணக்குத் தலைப்புகளில் வழங்கப்படுவதால், எப்போது சம்பளம்
வரும் என்று தெரியாது. அதேபோல, அந்தப் பணியில் இருப்பார்களா என்ற
நம்பிக்கையும் இல்லாமல் பணியாற்றி வருகின்றனர். இதனால் அந்தப் பணியில்
நீடிக்கிறார்களா இல்லையா என்பதை பார்த்த பின்பே அதிகாரிகள் சம்பளம்
பட்டியல் தயாரிக்கின்ற நிலை உள்ளது. அதனால் குறிப்பிட்ட தேதியில் இந்த
ஆசிரியர்களுக்கு சம்பளம் கிடைப்பதில்லை.
பிரச்னைக்குத்
தீர்வு என்ன?: கடந்த ஏப்ரல் மாதம் ஆர்எம்எஸ்ஏ திட்டத்தின் கீழ்
நியமிக்கப்பட்ட 8,462 ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் தாமதம்
ஏற்பட்டது. தற்போது எஸ்எஸ்ஏ மூலம் பணியமர்த்தப்பட்ட 1, 282 பட்டதாரி
ஆசிரியர்களுக்கு ஜூன் மாத சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லை. அதற்கான தொடர்
நீட்டிப்பு உத்தரவும் வழங்கப்படவில்லை.
இதுபோல் "சமக்ர சிக்ஷா' திட்டத்தின் கீழ் பணியாற்றும் சுமார் 50 ஆயிரம்
பேர் ஒவ்வொரு மாதம் சம்பளம் பெறவே போராட வேண்டிய நிலை உள்ளது. அதனால்
மேற்கண்ட பணியிடங்களை நிரந்தர பணியிடங்களாக மாற்றி உத்தரவிட வேண்டும்.
இல்லையெனில் மாதம்தோறும் தொடர் பணி நீட்டிப்பு ஆணை வழங்குவதற்கு பதிலாக
ஆண்டுக்கு ஒருமுறை என்ற அடிப்படையில் தொடர் பணி நீட்டிப்பு ஆணை வழங்கினால்
இந்த பிரச்னை இருக்காது என்றார்.







