இந்தியாவின் இரண்டாவது நிலவுப்பயணத் திட்டமான சந்திரயான்-2 இன்று திங்கள் கிழமை பிற்பகல் இந்திய நேரப்படி 2.43 மணிக்கு ஏவப்பட்டது.விண்வெளியில் செலுத்திய அடுத்த 16" வது நிமிடத்தில் புவியின் நீள் வட்ட சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது இதனால் விஞ்ஞானிகள் அனைவரும் ஒருவருக்கொருவர் கட்டிப்பிட்டித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்
சந்திரயான்-2 என்பது மூன்று பகுதிகளை உடைய ஒரு விண்கலத் தொகுப்பு. இதில், நிலவை சுற்றி வரும் கலன் ஒன்றும், நிலவில் தரையிறங்கும் கலன் ஒன்றும், நிலவின் தரைப்பரப்பில் ஊர்ந்து சென்று ஆய்வுகள் செய்யும் உலாவி (ரோவர்) ஒன்றும் இருக்கும்.
2008-ம் ஆண்டு இந்தியா தமது முதல் நிலவுப் பயணத் திட்டமான சந்திரயான்-1 ஐ ஏவியது. இந்த விண்கலன் நிலவில் தரையிறங்கவில்லை. நிலவைச் சுற்றிவந்து நிலவில் தண்ணீர் இருக்கிறதா என்பது பற்றி முதல் விரிவான ஆராய்ச்சியை தமது ரேடார்கள் உதவியோடு நடத்தியது.
150 மில்லியன் டாலர் செலவில் தயாரிக்கப்பட்டுள்ள தற்போதைய சந்திரயான்-2 திட்டம் தண்ணீர் மற்றும் தாதுப் பொருட்கள் நிலவில் இருப்பது பற்றியும், 'நிலவு'நடுக்கம் (புவியில் நடந்தால் 'நில நடுக்கம்'. நிலவில் நடந்தால் 'நிலவு நடுக்கம்') தொடர்பாகவும் ஆய்வுகள் செய்யும்.
நேற்று ஞாயிறு மாலை 6.43 மணிக்கு சந்திரயானை சுமந்துள்ள ஜி.எஸ்.எல்.வி. மார்க்3 செலுத்துவாகனத்தை ஏவுவதற்கான கவுண்ட் டவுன் தொடங்கியது. இன்று திங்கள் பிற்பகல் இந்த செலுத்துவாகனம், சென்னை அருகே உள்ள ஸ்ரீஹரிக்கோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து புகையும், நெருப்பும் கக்கியபடி கிளம்பியது, ஆனால், 3.84 லட்சம் கி.மீ. பயணம் ஒரே மூச்சில் முடிந்துவிடாது.
உண்மையில் சந்திரயான் விண்கலத் தொகுப்பின் மூன்று பாகங்களில் ஒன்று நிலவில் தரையிறங்குவது செப்டம்பர் 6 அல்லது 7-ம் தேதி தான் நடக்கும்.
ஏனென்றால் சந்திரயான்-2 நேர்க்கோட்டுப் பாதையில் நிலவை நோக்கிப் பயணிக்காமல் புவியைச் சுற்றி சுற்றி அடுத்தடுத்து பெரிய வட்டப் பாதையில் பயணித்து ஒரு கட்டத்தில் நிலவின் சுற்றுவட்டப்பாதையில் நுழையும்.
நிலவின் சுற்றுப் பாதையில் பயணிக்கும் கலனில் இருந்து நிலவில் தரையிறங்கும் கலன் பிரிவதில் இருந்து தரையிறங்குவது வரையிலான 15 நிமிடங்கள்தான் விஞ்ஞானிகளுக்கு மிகவும் சவாலானதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் டாக்டர் சிவன்.
இப்படி விண்வெளி சோதனையை அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுக்கு பிறகு நான்காவது நாடாக இந்தியா செய்துள்ளது என்பது இந்தியாவுக்கு பெருமை தரக்கூடிய ஒரு விஷயம் ஆகும்








