கசப்பு அமிர்தம்!
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
‘கோபக்கார மாப்பிள்ளைக்கு பாகற்காய் பத்தியமாம்’ என்றொரு பழமொழியை
கிராமப்புறங்களில் கேட்கமுடியும்.
கோபத்தின் உச்சியில் நிற்கும் மாப்பிள்ளையைக் கூட வழிக்கு கொண்டுவந்துவிடும் அளவுக்கு வீரியமானது பாகற் காயின் கசப்பு என்பதற்காக சொல்லப்பட்ட பழமொழி அது.
கசப்புச் சுவைக்கு பயந்தே பலரும் பாகற்காயைக் கண்டால் காததூரம் ஓட்டமெடுப்பார்கள். ஆனால், அந்தக் கசப்புத் தன்மைதான் 'அமிர்தம்' என்பது அவர்களில் பலருக்கும் தெரிவதில்லை. ‘கசப்பு அமிர்தம்’ என்று செல்லப்பெயர் சூட்டும் அளவுக்கு பாகற்காயில் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.
அறுசுவை எனப்படும் இனிப்பு, காரம், உவர்ப்பு, புளிப்பு, கசப்பு, துவர்ப்பு ஆகியவற்றை நம் அன்றாட உணவில் சரியான விகிதத்தில் சேர்த்துக் கொள்ளவேண்டும். ஆனால், ‘கடைசி இரண்டு சுவைகளான கசப்புச் சுவையையும் துவர்ப்புச் சுவையையும் அதிகம் சேர்த்துக் கொள்ளாததுதான் தற்காலத்து விநோத நோய்கள் பலவற்றுக்கும் காரணம்’ என்பது சித்த மருத்துவ ஆய்வாளர்களின் கருத்து.💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
‘கோபக்கார மாப்பிள்ளைக்கு பாகற்காய் பத்தியமாம்’ என்றொரு பழமொழியை
கிராமப்புறங்களில் கேட்கமுடியும்.
கோபத்தின் உச்சியில் நிற்கும் மாப்பிள்ளையைக் கூட வழிக்கு கொண்டுவந்துவிடும் அளவுக்கு வீரியமானது பாகற் காயின் கசப்பு என்பதற்காக சொல்லப்பட்ட பழமொழி அது.
கசப்புச் சுவைக்கு பயந்தே பலரும் பாகற்காயைக் கண்டால் காததூரம் ஓட்டமெடுப்பார்கள். ஆனால், அந்தக் கசப்புத் தன்மைதான் 'அமிர்தம்' என்பது அவர்களில் பலருக்கும் தெரிவதில்லை. ‘கசப்பு அமிர்தம்’ என்று செல்லப்பெயர் சூட்டும் அளவுக்கு பாகற்காயில் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.
கசப்புச் சுவையுள்ள பாகற்காயை பலகாலம் தொட்டே மருத்துவத் துக்கும், உணவுக்கும் பயன்படுத்தி வந்துள்ளனர் தமிழர்கள். நாடோடிகளாக மலைகளில் திரிந்த காலத்தில், ‘சகலவிதமான விஷத்தையும் பாகற்காய் முறிக்கும்’ என்ற பெரும் நம்பிக்கை நம்மவர்களிடையே இருந்திருக்கிறது. காலப்போக்கில்தான் நாகரிக ஜோரில் 'கசப்பு' என்பதிடமிருந்து காத தூரம் விலக ஆரம்பித்து, வியாதிகளைச் சுமக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
பாகற்காய் குறித்து பெரிய அளவிலான வரலாற்றுக் குறிப்புகள் இல்லை என்றாலும், மனிதன் காட்டில் வேட்டையாடி வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருந்த காலத்திலேயே அதை மருந்தாகப் பயன்படுத்தியதற்கான குறிப்புகள் உள்ளன.
‘இந்தியாவின் வடகிழக்குப் பகுதி அல்லது சீனாவின் தென்பகுதி தான் பாகற்காயின் பிறப்பிடமாக இருக்கலாம்’ என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இங்கிருந்துதான் பிற பகுதிகளுக்கும் அது பரவி இருக்கவேண்டும் என்பதும் அவர்களின் கணிப்பு.
அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளில் பாகற்காய் இலையில் இருந்து தயாரிக்கப்படும் தேநீருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பாகற்காய்... கபம், பித்தம், ரத்தச் சுத்திகரிப்பு மற்றும் வயிறு சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் மருந்தாகப் பயன்படுகிறது.
100 கிராம் பாகற்காயில், 25 மில்லி கிராம் கலோரி, 20 மி.கி. கால்சியம், 70 மி.கி. பாஸ்பரஸ், 1.6 சதவீதம் புரதம், 0.2 சதவீதம் கொழுப்பு, 1.8 மி.கி. இரும்புச் சத்து, 0.8 சதவீதம் தாதுக்கள், 88 மி.கி. பி காம்ப்ளெக்ஸ், 0.8 சதவீதம் நார்ச்சத்து, 4.2 சதவீதம் கார்போஹைட்ரேட் சத்துகள் உள்ளன.
வைட்டமின் ஏ, பி, சி, பீட்டா கரோட்டின், பிளேவோனாய்டுகள், லூடின், இரும்புச்சத்து, துத்தநாகம், பொட்டாசியம், மாங்கனீசு, மக்னீசியம் போன்ற சத்துக்களும் உள்ளன.
மருத்துவப் பயன்கள்
பாகற்காயில் உள்ள மோர்மோர்சிடின் மற்றும் சரடின் என இரண்டு ஆன்டி ஹைபர் கிளைசீமிக் பொருட்கள், தசைகளுக்கு தேவைப்படும் சர்க்கரையைக் கொண்டு செல்லும் முக்கிய வேலையை செய்கின்றன.
அதுமட்டுமல்லாது, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, ரத்த சுத்திகரிப்பானாகவும் செயல்படுகிறது.
மூன்று நாட்களுக்கு ஒரு முறை பாகற்காய் ஜூஸ் குடித்து வந்தால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைக்கலாம்.
மேலும் செரிமான அமிலமான காஸ்ட்ரிக் ஆசிட் அதிகமாக சுரப்பதால் பசி அதிகரிக்கும்.
பாகற்காயில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்சிடன்ட்கள், விஷத்தன்மையுள்ள அழுத்தத்தால் கண்களுக்கு ஏற்படும் பாதிப்பில் இருந்து பாதுகாக்கும்.
பாகற்காயையோ, அதன் இலைகளையோ வெந்நீரில் வேக வைத்து தினந்தோறும் சாப்பிட்டு வந்தால், நோய்த்தொற்றுகள் அண்டாமல், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி கூடும்.
'டைப் 2' நீரிழிவு நோயை எதிர்கொள்ள சிறந்த மருந்தாக பாகற்காய் சாறு பயன்படுகிறது. பாகற்காயில் உள்ள 'பாலிபெப்டைடு-பி' என்ற வேதிப்பொருள் இன்சுலின் போல செயல்பட்டு, ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது.
பாகற்காயில் நார்ச்சத்து மிகுந்துள்ளதால், இது செரிமானத்துக்கு மிகவும் உதவுகிறது. இதன் காரணமாக உணவு நன்றாக செரிக்கப்பட்டு, கழிவுகள் எளிதாக வெளியே தள்ளப்படுகின்றன.
குறிப்பாக உணவுப் பையில் உள்ள பூச்சிகளைக் கொன்று, பசியைத் தூண்டும் தன்மை இதற்கு உண்டு. தாய்மார்களுக்கு பால் சுரப்பை அதிகரிக்கும் அற்புத மான சக்தியும் பாகற்காய்க்கு உண்டு. அவ்வப்போது இதை உணவில் சேர்த்து வந்தால் ஜுரம், இருமல், இரைப்பைக் கோளாறு, மூலம் மற்றும் வயிற்றுப்புழு ஆகியவற்றிலிருந்து தப்பிக்க முடியும் என்கிறார்கள் சித்த மருத்துவர்கள்.
நாய்க்கடிக்குக்கும் கூட பாகல் வைத்தியம் வழக்கத்தில் இருந்திருக்கிறது. நாய் கடித்துவிட்டால், அதன் விஷத்தை முறிக்க பாகற்காய் இலையை அரைத்து, உடம்பு முழுவதும் தடவிக்கொண்டு ஒரு மணி நேரம் ஊறவைத்து, பிறகு குளிப்பார்களாம். தொடர்ந்து மூன்று நாட்களுக்கு இப்படிச் செய்தால் நாயின் விஷம் முறிந்துவிடுமாம்.
‘பாகற்காய் இலையை உலர்த்தி பீடி போல் சுற்றி அதன் புகையை உறிஞ்சினால் பல நோய்கள் பறந்துவிடும்’ என்கிறது ஆயுர்வேத மருத்துவக் குறிப்பு ஒன்று.
நவீன மருத்துவ ஆய்வுகளில் ‘நீரழிவு நோய்க்கு பாகற்காய் சிறந்த மருந்து’ எனக் கண்டறிந்துள்ளனர். அதேபோல பாகற்காயைப் பயன்படுத்தி காசநோய், தொழுநோய், எய்ட்ஸ் போன்ற கொடிய நோய்களுக்கு மருந்து கண்டுபிடிப்பது தொடர்பான ஆய்வுகளும் தொடர்ந்து நடக்கின்றன.
அம்மை நோய் வந்தால் வாசலில் வேப்பிலைக் கட்டி வைப்பது நம்ம ஊர் வழக்கம். ஆப்பிரிக்க பழங்குடி மக்களுக்கு பாகற்காய் இலைதான் வேப்பிலை. இன்றைக்கும் கூட அந்த மக்கள் பாகற்காய் இலைகளை வாசலில் கட்டி வைப்பதோடு, இலையை அரைத்து உடலிலும் பூசிக் கொள்ளும் வழக்கத்தை கடைபிடித்து வருகிறார்களாம்.
இப்படி மருந்துக் காயாக இருக்கும் பாகற்காயை பயிர் செய்வது மிகவும் சுலபமானதே. எந்த தட்பவெட்பச் சூழலிலும் வளரக்கூடிய தன்மை கொண்ட பாகற்காய், வெப்ப பிரதேசங்களான கிழக்கு ஆப்ரிக்கா, தென்ஆப்ரிக்கா, இந்தியா, கரீபியன் மற்றும் சீனா போன்ற நாடுகளில் அதிகமாக விளைவிக்கப்படுகிறது.
அமெரிக்கா போன்ற நாடுகளில் பாகற்காயில் இருந்து பீர் தயாரிக்கிறார்கள் என்பது 'குடிமகன்' களுக்கான இனிப்பு அல்லது கசப்புச் செய்தி!
எனவே கசப்பு சுவை காரணமாக பாகற்காயை ஒதுக்கிவிடாமல், அவ்வப்போது அதை உணவில் சேர்த்துக்கொண்டு பலன் பெறலாம்!
Shared by M Vijayan
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...