
உயிரிழந்த டாக்டர் பெங் யூன்ஹுவா
பீஜிங்:
சீனாவின்
ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின்
பல்வேறு நாடுகளுக்கும் பரவி பெரும் அச்சுறுத்தலாக விளங்கிவருகிறது.
இந்த
வைரஸ் பாதிப்பிற்கு 2 ஆயிரத்து 236 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 75
ஆயிரத்து 465 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி
செய்யப்பட்டுள்ளதாக சீன அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், வைரஸ் பாதிப்பு அதிகமாக பரவியுள்ள வுகான் நகரில் உள்ள
மருத்துவமனைகளில் டாக்டர்கள், செவிலியர்கள் என அனைத்து மருத்துவ
ஊழியர்களும் இரவு பகல் பாராமல் நோயாளிகளுக்கு தீவிர சிகிச்சை
அளித்துவருகின்றனர்.
இவர்களில் பலரும் தங்கள் குடும்ப உறவுகளை பிரிந்து கொரோனா பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
வைரஸ்
தங்களுக்கும் பரவி விடக்கூடாது என்ற எண்ணத்தில் மருத்துவ ஊழியர்கள் தங்கள்
முகங்களில் முகமுடிகளை அணிந்துகொண்டுதான் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து
வருகின்றனர்.
ஆனாலும், அதிக எண்ணிக்கையிலான
நோயாளிகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், நோயாளிகளிடமிருந்து
மருத்துவ ஊழியர்களுக்கும் கொரோனா வைரஸ் பரவிவருகிறது.
கொரோனா
குறித்து முதல் முதலில் அதிகாரிகள் மற்றும் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த
வுகான் நகரை சேர்ந்த டாக்டர் லி வென்லியங், வுஷன்ங் பகுதியில் உள்ள
மருத்துவமனையின் இயக்குனராக செயல்பட்டுவந்த லியூ ஹிம்மிங் உள்பட 8 மருத்துவ
ஊழியர்கள் இதுவரை வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில்,
வுகான் நகரில் உள்ள மருத்துவமனையில் கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு
சிகிச்சையளித்துவந்தவர் டாக்டர் பெங் யூன்ஹுவா(29) கொரோனா தாக்கி
உயிரிழந்துள்ளார்.
டாக்டர் பெங் யூன்ஹுவா கடந்த
ஜனவரி மாத இறுதியில் திருமணம் செய்துகொள்வதாக இருந்தது. அதற்காக திருமண
அழைப்பிதழ்கள் உள்பட அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவைத்திருந்தார்.
ஆனால்
கொரோனா வைரசின் தாக்கம் அதிகமாக இருந்ததால் நோயாளிகளுக்கு
சிகிச்சையளிக்கவேண்டும் என்ற நோக்கில் தனது திருமணத்தை
ஒத்திவைத்திருந்தார். ஆனால், நோயாளிகளுக்கு சிகிச்சையளித்துவந்த டாக்டர்
பெங் யூன்ஹுவாவுக்கும் துரதிஷ்டவசமாக வைரஸ் தொற்றியிருந்தது கடந்த ஜனவரி
25-ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து
ஜின்யன்டன் நகரில் உள்ள மருத்துவமனையில் மருத்துவர்கள் அவருக்கு தீவிர
சிகிச்சையளித்து வந்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி பெங் யூன்ஹுவா நேற்று
பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனால், கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழந்த மருத்துவ ஊழியர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.
இதற்கிடையில்,
நோயாளிகளுக்கு சிகிச்சையளித்துவரும் ஆயிரத்து 716 மருத்துவ ஊழியர்களுக்கு
கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.