பகல் முழுக்க கொளுத்தும் வெயில்... இரவில் அது கிளப்பிவிட்ட அனல்.
ஏர்கண்டிஷனர் அல்லது ஏர்கூலர் இல்லாமல் பெரியவர்களாலேயே தூங்க முடிவதில்லை.
குழந்தைகள் என்ன செய்வார்கள் பாவம்? ஆனால், குழந்தைகளை ஏ.சி. அல்லது
ஏர்கூலர் உள்ள அறையில் தூங்கவைக்கும்போது, பல விஷயங்களில் கவனமாக இருக்க
வேண்டும். இதோ, அதற்கான உஷார் டிப்ஸை தருகிறார்கள் குழந்தை நல மருத்துவர்
பழனிராஜ் மற்றும் பொதுநல மருத்துவர் ஜோஸ்.
* ஏ.சி. காற்று குழந்தைகளின் முகத்தில் நேரடியாகப் படுவதுபோல, படுக்க
வைக்காதீர்கள். ஏ.சி. காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால், குழந்தைகள்
மூச்சுவிடக் கஷ்டப்படுவார்கள். பக்கத்தில் படுத்துக்கொண்டிருக்கும் நாமும்
தூங்கிவிடுவதால், பிள்ளைகள் மூச்சுவிடச் சிரமப்படுவது தெரியாமலே
போய்விடலாம்.
* ஏ.சி.யில் இருக்கும் பில்டரில் சேரும் தூசியை வாரத்துக்கு ஒருமுறை
சுத்தம் செய்ய வேண்டும். இல்லையென்றால், அதில் இருக்கும் கண்ணுக்குத்
தெரியாத தூசிகள், குழந்தைகளின் மூச்சுக்குழாய்க்குள் சென்றுவிடும். இந்தத்
தூசியை வெளியேற்றுவதற்காக, நுரையீரலானது சளியை அதிகமாக உற்பத்தி செய்ய
ஆரம்பிக்கும். குழந்தைகளுக்கு அடிக்கடி சளிப் பிடிப்பதற்கு இதுவும் ஒரு
காரணம்.
* குழந்தைகளுக்கு உடல் டெம்பரேச்சர் மாறுவது பற்றிச் சொல்லத் தெரியாது.
எனவே, சூடான டெம்பரச்சரிலிருந்து சட்டென ஏசி அறைக்குள் அழைத்துச்
செல்லாதீர்கள். அல்லது, அறைக்குள் நுழைந்ததுமே 16, 17 எனக் குறைந்த
டெம்பரேச்சரில் ஏ.சி.யை வைக்காதீர்கள்.