புதுடில்லி :பிரதமர் நரேந்திர மோடி, மாநில முதல்வர்களுடன், 'வீடியோ
கான்பரன்ஸ்' வழியாக, இன்று(ஏப்.,27) ஆலோசனை நடத்துகிறார். நிதியுதவி உட்பட
பல்வேறு கோரிக்கைகளை, முதல்வர்கள் முன்வைப்பர் என, எதிர்பார்க்கப்படுகிறது.
ஊரடங்கை தளர்த்துவது பற்றி, இந்த கூட்டத்தில் முக்கிய முடிவு
எடுக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
சீனாவில் பிறந்த கொரோனா
வைரஸ், உலகையே அச்சுறுத்தி வருகிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, கடந்த
மாதம், 25ம் தேதி, நாடு முழுதும், 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
முதல், 21 நாள் ஊரடங்கின் போது, மாநில முதல்வர்களுடன், பிரதமர் மோடி,
இரண்டு முறை, வீடியோ கான்பரன்ஸ் வழியாக ஆலோசனை நடத்தினார். முதல்வர்கள்
கோரிக்கையை ஏற்று, மே, 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. ஊரடங்கு
காரணமாக, அனைத்து தொழில்களும் முடங்கி உள்ளன. ஏழைகள், தினக்கூலி
தொழிலாளர்கள், வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர்.
இந்நிலையில்,
மாநில முதல்வர்களுடன், பிரதமர், மோடி, வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக, இன்று
ஆலோசனை நடத்துகிறார். இரண்டாவது ஊரடங்கு காலம் நிறைவடைய, இன்னும் ஏழு
நாட்களே உள்ள நிலையில், இன்று நடக்க உள்ள ஆலோசனை கூட்டத்தில், ஊரடங்கை
தளர்த்துவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. மேலும், சலுகைகள், நிவாரணம்
தொடர்பாக, முதல்வர்களிடம் பிரதமர் கருத்துக்களை கேட்டறிய உள்ளார்.

வலியுறுத்தல்
ஊரடங்கை
மேலும் நீட்டிப்பதை, பல மாநில முதல்வர்கள் விரும்பவில்லை. குறிப்பாக,
மேற்கு வங்கம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய மாநில முதல்வர்கள்,
ஊரடங்கு தளர்த்தப்பட வேண்டும் என, வலியுறுத்துவர் என்று தெரிகிறது. கடந்த
இரண்டு முறை, பிரதமர் நடத்திய ஆலோசனை கூட்டம், மிகவும் சுமுகமாக நடந்தது.
ஆனால், இம்முறை முதல்வர்கள், பல கோரிக்கைகளை முன் வைப்பர் என, தெரிகிறது.
'நிதி
நெருக்கடியை மாநிலங்கள் தொடர்ந்து சந்தித்தால், வைரஸ் பரவலை கட்டுப்படுத்த
முடியாது. 'அதனால், பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில்
மட்டும், ஊரடங்கை நீட்டிக்க வேண்டும். மற்ற இடங்களில் தளர்த்த வேண்டும்'
என, முதல்வர்கள், பிரதமரிடம் கோரிக்கை விடுப்பர் என,
எதிர்பார்க்கப்படுகிறது. சில மாநிலங்களில், வைரஸ் பரவல் இல்லாத பகுதிகளில்,
சமூக விலகலை கடைப்பிடித்து, தொழிற்சாலைகள் இயக்கப்படுவதையும், பொருளாதார
நடவடிக்கைகள் துவக்கப்பட்டுள்ளதையும் பிரதமரிடம் தெரிவிக்க, முதல்வர்கள்
முடிவு செய்துள்ளனர்.
இதேபோல், பல்வேறு மாநில முதல்வர்களும், மத்திய
அரசு நிதியுதவி அளித்தால் மட்டுமே, வைரஸ் பரவலை கட்டுப்படுத்தி, இயல்பு
வாழ்க்கைக்கு திரும்ப முடியும் என, தெரிவித்துள்ளனர். அதனால், இன்று
நடக்கும் ஆலோசனை கூட்டத்தில், பிரதமரிடம், நிதியுதவி உட்பட, பல்வேறு
கோரிக்கைகளை முதல்வர்கள் வலியுறுத்த உள்ளனர். கூட்டத்துக்கு பின்,
நிதியுதவி உட்பட, பல்வேறு அறிவிப்புகளை, மத்திய அரசு வெளியிடும் என,
எதிர்பார்க்கப்படுகிறது.