
உங்கள் சமையல் அறை கூட மருத்துவமனைதான்.
வீட்டிற்குள்
தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் இந்த நேரத்தில், கொரோனா பீதியால் பலரும்
பயத்துடன் காணப்படுகிறார்கள். சாதாரண வாந்தியும், வயிற்று வலியும் கூட
அவர்களை கவலைகொள்ள வைத்துவிடுகிறது. அப்படிப்பட்ட கவலை எதுவும் தேவையில்லை.
இதுபோன்ற பிரச்சினைகளுக்கு மருத்துவமனை செல்லவும் அவசியமில்லை. உங்களுக்கு
ஏற்படும் பெரும்பாலான சாதாரண உடல் நல பிரச்சினைகளுக்கு, உங்கள் சமையல்
அறையிலேயே மருந்து இருக்கிறது. உங்கள் சமையல் அறை கூட மருத்துவமனைதான்
என்பதை நினைவில் வையுங்கள்.
பல்வலி பெரும்பாலும் இரவு நேரத்தில்தான் வரும். வலி வந்ததும் சிறிதளவு
கடுகை மெல்லுங்கள். வலி கட்டுப்படும். கடுக்காய் தோட்டை சுட்டு கரியாக்கி
அதில் சிறிதளவு படிகாரம், மிளகுதூள் கலந்து பல் தேய்த்து வந்தால், அது
பல்வலிக்கு நிரந்தர தீர்வாக அமையும். கிராம்பு தைலத்தை பஞ்சில் நனைத்து,
வலியிருக்கும் பல் மீது வைத்தாலும் வலி விலகும்.
ஆடாதோடை இலையை அரைத்து சாறு எடுத்து, அதில் சிறிதளவு தேன் கலந்து தினமும்
நான்கு வேளை வீதம், ஒரு வாரம் சாப்பிட்டு வந்தால் இருமல் சரியாகும். ஆடா
தோடையுடன் சீரகம் சேர்த்து வறுத்து தண்ணீர் கலந்து கொதிக்கவைத்து, ஆறிய
பின் பருகினாலும் இருமல் கட்டுப்படும். ஆடாதோடை சாறுடன் தேன் கலந்து வெறும்
வயிற்றில் சாப்பிட்டால் சளி வெளியேறும்.
சிறிதளவு இந்துப்பூ, அதன் இரு மடங்கு அதிமதுரம், நான்கு மடங்கு திப்பிலி,
ஆறு மடங்கு கடுக்காய் போன்றவற்றை, தனித்தனியாக அரைத்து ஒன்றாக்கி
பாட்டிலில் அடைத்து வைத்துக்கொள்ளுங்கள். மலச்சிக்கல் ஏற்படும்போது இதனை
சுடுநீரில் கலந்து பருகுங்கள்.
சுக்கு அரைத்து, அதை தேனில் கலந்து சாப்பிட்டால் விக்கல் நீங்கும். பூண்டு,
சீரகம் ஆகியவற்றை சிவப்பு நிறம் போகும் வரை நெய்யில் வறுத்து எடுங்கள்.
சாப்பிடும்போது முதல் கவளம் சாதத்தில் அதனை சேர்த்து சாப்பிட்டாலும்
விக்கல் விலகும்.
வயிற்று வலி ஏற்பட்டால் ஒருபிடி கறிவேப்பிலையை, புளித்த மோரிலோ, சுடுநீரிலோ
அரைத்து பருகுங்கள். சிறிதளவு கடுகு எண்ணெய்யை சூடாக்கி தொப்புளை சுற்றி
தேய்த்தாலும் வலி நீங்கும். கறிவேப்பிலை துளிரை மென்று சாப்பிட்டால்
மலத்தில் ரத்தமும், சளியும் வெளியேறுவது நிற்கும். இந்துப்பூ, சீரகம்,
அதிமதுரம், திப்பிலி, சுக்கு, கடுக்காய்தோடு ஆகியவைகளை தூளாக்கி பாட்டிலில்
அடைத்து வைத்துக்கொள்ளுங்கள். இதனை சிறிதளவு வெல்லத்தில் கலந்து
சாப்பிட்டால் அஜீரணம், வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு கட்டுப்படும்.
வாயு தொந்தரவு ஏற்பட்டால் பாலில் பூண்டு போட்டு காய்ச்சி இரவில்
பருகுங்கள். ஒரு வாரம் தொடர்ச்சியாக இதை பருகினால் வாயு தொந்தரவு அகலும்.
பூண்டுவை தீயில் சுட்டும் சாப்பிடலாம். சிறிதளவு பெருஞ்சீரகத்தை அரைத்து
பசும்பாலில் கலந்து பருகினால் வயிற்றுப்போக்கு கட்டுப்படும், வாயு தொந்தரவு
இருக்காது.
ஏலக்காய் விதைகளை வாயில் போட்டு மென்றால் வாய் நாற்றம் நீங்கும். தினமும்
காலையில் பல்தேய்த்து முடித்ததும் நாலைந்து துளசி இலைகளையோ அல்லது புதினா
இலை களையோ மெல்லும் பழக்கத்தையும் ஏற்படுத்திக்கொள்ளுங்கள். கிராம்பு இலை,
மாவிலை போன்றவற்றையும் மெல்லலாம்.
இஞ்சி சாறும், எலுமிச்சை சாறும் சம அளவில் எடுத்து சிறிதளவு இந்துப்பூவும்
கலந்து தினமும் நான்கு வேளை பருகினால் ஜீரண பிரச்சினை நீங்கும். இஞ்சி
சாறில் மிளகு, சீரகம் கலந்து மென்று தின்றால் புளித்த ஏப்பம் அகலும். இஞ்சி
சாறில் சிறிதளவு உப்பு கலந்து ருசித்தால் வயிற்றுவலி, வாந்தி
கட்டுப்படும்.
மாதவிடாய் காலத்தில் அதிக வலியால் அவதிப்படுகிறவர்கள், மாதவிடாய்
ஏற்படுவதற்கு ஐந்து நாட்களுக்கு முன்பிருந்து மாதவிடாய் வரும் நாள் வரை
தினமும் மூன்று முறை புதினா சாறு பருகவேண்டும். 15 மி.லி. புதினா சாறில்
சிறிதளவு வெல்லம் கலந்துகொள்ளலாம். சிறிதளவு கற்றாழை ‘ஜெல்’ எடுத்து காலை,
மாலை நேரங்களில் சாப்பிட்டாலும் மாதவிலக்கு வலி மறையும். எள்ளுவை தூளாக்கி
சிறிதளவு சுடுநீரில் கலந்து தினமும் இரண்டு வேளை பருகினாலும் வலி
கட்டுப்படும். உணவு சாப்பிட்ட பின்பே இதனை பருகவேண்டும். மாதவிலக்கு
தொடங்குவதற்கு 7 நாட்களுக்கு முன்பிருந்து இதனை பருகி வந்தால் நல்ல மாற்றம்
ஏற்படும்.
மூன்று பங்கு கறிவேப்பிலை, ஒரு பங்கு மிளகு எடுத்து அரைத்து, நெல்லிக்காய்
அளவு உருட்டி புளித்த மோரில் கலக்கி குடித்தால் வாய்ப்புண் ஆறும்.
கறிவேப்பிலையை அரைத்து மோரில் கலக்கி கொப்பளிப்பதும் நல்லது. நெல்லிக்காயை
அரைத்து சாறு எடுத்து அதில் கருஞ்சீரக தூள் கலந்து குடிப்பதும் சிறந்தது.