தமிழக பள்ளி கல்வி பாட திட்டத்தில் படித்த, பிளஸ் 2 மாணவர்களுக்கு, மார்ச்சில் பொதுத் தேர்வு நடத்தப்பட்டது. மார்ச், 24ல் இந்த தேர்வுகள் முடிந்தன. இந்த தேர்வில், 8.5 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர்.தேர்வு எழுதிய மாணவர்களுக்கான விடைத்தாள்கள், மே, 27 முதல் திருத்தப்பட்டன. முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், இந்த பணிகளை, ௧௦ நாட்களில் முடித்தனர். இதையடுத்து, மதிப்பெண் கணக்கீடு, மதிப்பெண் பட்டியல் தயாரிப்பு மற்றும் சரிபார்க்கும் பணிகள் நடந்து வருகின்றன.
மேலும், மாணவர்களே நேரடியாக, ஆன்லைனில் மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்யவும், பள்ளி தலைமை ஆசிரியர்கள் வழியே மதிப்பெண் பட்டியல் நகலை பெறவும், ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை, அமைச்சர் செங்கோட்டையன் விரைவில் வெளியிட உள்ளார்.மார்ச், 24ல் நடந்த தேர்வில், பங்கேற்காத மாணவர்கள், மறுதேர்வு எழுத விரும்பும் மாணவர்களின் பட்டியல் சேகரிக்கப்பட்டு உள்ளது. அவர்களுக்கு, ஏற்கனவே எழுதிய பாடங்களுக்கான முடிவுகள் மட்டும் வெளியிடப்படும் என்றும், பள்ளி கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.









