பாதுகாப்பு நலன் கருதி ஆசிரியர்களை வீட்டிலிருந்தபடியே கொரோனா பணியில்
பயன்படுத்த அரசு முன்வர வேண்டுமென்று தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கை
விடுத்துள்ளது. இது குறித்து அச்சங்கத்தின் மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன்
வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
பெருந்தொற்று கொரோனா வைரஸைகட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை
மேற்கொண்டுவரும் தமிழக அரசினை பாராட்டுகிறோம். கொரோனா வைரஸ் நாடுமுழுவதும்
மின்னல் வேகத்தில் பரவிவருகிறது. குறிப்பாக சென்னையில் 42 ஆயிரத்தைத்
தாண்டியுள்ள வைரஸ் தொற்று, மக்களை மிரள வைத்துக்கொண்டிருக்கிறது.
கல்வித்துறையில்பணிபுரியும் ஆசிரியர்களை கொரோனா தடுப்பு நடவடிக்கையில்
பயன்படுத்திவருவதால் அவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் சூழல்
ஏற்பட்டுள்ளது.பெரும்பாலான ஆசிரியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு
தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களின் வீடுகளுக்கு சென்று கணக்கெடுப்பு பணியான
Street warrior பணியிலும் , மண்டல அலுவலகங்களில் செயல்படும் Tele
counselling மையத்திலும் ஈடுபடுத்தப்பட்டுவருகின்றனர். Tele
counselling-மையத்தில் தினம் காலை 8 மணியிலிருந்து 2 மணி வரையும் ,
பிற்பகல் 2 மணியிலிருந்து இரவு 8 மணிவரை என்று சிப்ட் முறையில் ஆசிரியர்கள்
வரவழைக்கப்பட்டு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். கொரோனா பரவலுக்கு
மத்தியில், உயிரை கையில் பிடித்துக்கொண்டு, பாதுகாப்பற்ற சூழலில் பணியாற்ற
சொல்வது ஆசிரியர்கள் மத்தியில் கடும் மனஉளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
பேரிடர்காலங்களில் ஆசிரியர்கள் தானாகவே முன்வந்து சேவைபுரிந்துவருகிறார்கள்
என்றால் அதுமிகையாகாது.
ஆனால் தற்போது கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் அசாதாரணச்
சூழலில் ஆசிரியர்களை பயன்படுத்துவதில் தவறில்லை. ஆனால் உதவிகல்வி
அலுவலர்கள் தலைமையாசிரியர்கள் மூலமாக விருப்பமில்லாத ஆசிரியர்களை
கட்டாயப்படுத்தி பணிக்கு வரசொல்வது,ஏற்கனவே அச்சத்தில் உள்ள
ஆசிரியர்களுக்கு மனஉளைச்சலையும், மன அழுத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அதேவேளையில், ஆசிரியர்களின் உடல்நிலை, மாற்றுத்திறனாளிகள், 50 வயதிற்கு
மேற்பட்டோர், நீரிழிவு நோய், ரத்தஅழுத்தம் போன்ற நோய்களால்
பாதிக்கப்பட்டோரும் மற்றும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் பாதுகாப்புக்கருதி
சொந்த ஊருக்கு சென்றுள்ள பல ஆசிரியர்களையும் கட்டாயப்படுத்தி
பணிக்குவரச்சொல்லி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர்
சங்கம் சார்பில் வேண்டுகிறோம்.மேலும், உடல்நிலைப் பாதிக்கப்பட்டோரை
பயன்படுத்துவதால் நோய் தொற்று விரைந்து பரவும் அபாயம் உள்ளது.
எனவேஎப்போதும் பேரிடர் காலத்தில் அரசுக்கு உறுதுணையாக ஆசிரியர்கள்
இருந்துவருகிறார்கள் என்பதை கருத்தில் கொண்டு, Tele counselling போன்ற பணி
வீட்டிலிருந்தே செய்யக்கூடிய பணி என்பதால் வீட்டிலிருந்தபடியே அந்தபணியை
மேற்கொள்ள ஆசிரியர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும், இல்லையேல் அவர்கள்
பணிசெய்யும் பள்ளிகளிலே ஆலோசனை மையங்களை ஏற்படுத்தி தினந்தோறும் 30 சதவீதம்
ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து பணிசெய்ய ஆவனசெய்ய வேண்டும் என அரசை
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகிறோம் என அதில்
கூறப்பட்டுள்ளது.