முழு ஊரடங்கு
சென்னை:
நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து, ஊரடங்கு
உத்தரவும் நீண்ட நாட்களாக அமலில் இருந்து வருகிறது. தமிழகத்தில் தற்போது,
6-வது கட்டமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. குறிப்பாக,
மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு
அமல்படுத்தப்படுகிறது. அந்த வகையில், நாளை 4-வது முழு ஊரடங்கு வருகிறது.
தமிழகம் முழுவதும் அனைத்து கடைகளும், பெட்ரோல் பங்குகளும்
மூடப்பட்டிருக்கும். அத்தியாவசிய பொருட்களை எடுத்துச் செல்லும்
வாகனங்களுக்கும், ஆம்புலன்ஸ்களுக்கும், மருத்துவ சிகிச்சைகளுக்கு நோயாளிகளை
அழைத்துச் செல்லும் தனியார் வாகனங்களுக்கும், அமரர் ஊர்திகளுக்கும் அனுமதி
அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், பத்திரிகைகளை எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கும் எந்தத் தடையும்
இல்லை என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பத்திரிகை மற்றும்
ஊடகத் துறையினர் செய்தி சேகரிக்க செல்லவும் தடை இல்லை என்று
கூறப்பட்டுள்ளது. எனவே, நாளை (ஞாயிற்றுக்கிழமை) பத்திரிகைகளை எடுத்துச்
செல்லும் வாகனங்களை தடை செய்யக்கூடாது என்று போலீசாருக்கு உயர் அதிகாரிகள்
உத்தரவிட்டுள்ளனர்.







