
சென்னை : பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. இதில்,
96.04 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட, 3.11
சதவீதம் மாணவியர் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழகத்தில்,
பிளஸ் 1 பொதுத்தேர்வு, மார்ச், 23ல் முடிந்தது. 26ம் தேதி நடக்கவிருந்த
கடைசி தேர்வு, ஊரடங்கால் ரத்து செய்யப்பட்டு, அந்த பாடத்தில் மட்டும்,
அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
தேர்ச்சி
இந்நிலையில்,
மற்ற பாடங்களுக்கான தேர்வு முடிவுகளை, அரசு தேர்வுத்துறை இயக்குனரகம்
நேற்று வெளியிட்டது. மொத்தம், 7,249 பள்ளிகளை சேர்ந்த, 4.35 லட்சம்
மாணவியர் உட்பட, 8.15 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். மேலும், 15
ஆயிரம்தனி தேர்வர்களும் தேர்வெழுதினர். இவர்களில், 96.04 சதவீதமான, 7.83
லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாணவர்களில், 94.38 சதவீதம்
பேரும், மாணவியரில், 97.49 சதவீதத்தினரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாற்றுத் திறனாளிகளில், 2,819 பேர் தேர்வு எழுதி, 2,672 பேர் தேர்ச்சி
பெற்றுள்ளனர்.
கோவை முதலிடம்
மாநில
அளவில், 2,716 பள்ளிகளில், அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று, 100
சதவீத தேர்ச்சி கிடைத்துள்ளது. கோவை மாவட்டம், 98.10 சதவீத தேர்ச்சியுடன்,
மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளது. விருதுநகர், 97.90 சதவீதத்துடன்
இரண்டாம் இடமும், கரூர் மாவட்டம், 97.51 சதவீதத்துடன் மூன்றாம் இடமும்
பெற்று உள்ளன.
பாடப் பிரிவுகளில், அறிவியல் பிரிவு மாணவர்கள், 96.33
சதவீதம், வணிகவியலில், 96.28 சதவீதம்; கலை பிரிவில், 94.11 சதவீதம்,
தொழிற்கல்வி பிரிவில், 92.77 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
நிர்வாக
ரீதியான பள்ளிகளில், மெட்ரிக் பள்ளிகள், 99.51 சதவீதம் தேர்ச்சி பெற்று,
முதலிடத்தை தக்க வைத்துள்ளன. மகளிர் பள்ளிகள், 97.56; அரசு உதவி பெறும்
பள்ளிகள், 96.95; இருபாலர் பள்ளிகள், 96.20; அரசு பள்ளிகள், 92.71 சதவீதம்
மற்றும் ஆண்கள் பள்ளிகள், 91.77 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
வேதியியலில் அதிக தேர்ச்சி; தாவர, விலங்கியலில் வீழ்ச்சி
*
பாடங்கள் அடிப்படையில், வேதியியலில், 99.95 சதவீதம் பேர் தேர்ச்சி
பெற்றுள்ளனர். இந்த பாடத்துக்கான தேர்வு தான் ரத்து செய்யப்பட்டது. அதனால்,
ஆல் பாஸ் அடிப்படையில், இந்த தேர்ச்சி கிடைத்துள்ளது
* கணினி
அறிவியலில், 99.25 சதவீதம், கணிதம், 98.56 சதவீதம், கணக்கு பதிவியலில்,
98.16 சதவீதம் தேர்ச்சி கிடைத்துள்ளது. கணக்கு பதிவியல் தேர்வும் ரத்து
செய்யப்பட்டதால், மாணவர்கள் அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர். உயிரியலில், 97.64
சதவீதம் பேர் தேர்ச்சியாகி உள்ளனர்
*இயற்பியலில், 96.68 சதவீதம்,
வணிகவியலில், 96.44 சதவீதம், விலங்கியலில், 94.53 சதவீதம், தாவரவியலில்,
93.78 சதவீதம் பேர் மட்டும் தேர்ச்சி பெற்றுள்ளனர். முக்கிய பாடங்களில்,
தாவரவியல் மற்றும் விலங்கியலில் தான் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது.
3 ஆண்டுகளில் தேர்ச்சி அதிகரிப்பு
மூன்று ஆண்டுகளில், பிளஸ் 1 தேர்வு எழுதிய மாணவர்களை கணக்கிடும் போது,
சென்ற ஆண்டை விட, இந்த ஆண்டு தேர்வு தேர்ச்சி எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கடந்த, 2018ல், 8.63 லட்சம் பேர்; 2019ல், 8.06 லட்சம் பேர் தேர்வு
எழுதினர். இந்த ஆண்டு, 8.30 லட்சம் பேர் தேர்வு எழுதியுள்ளனர். 2018ல்,
91.33 சதவீதம்; 2019ல், 95 சதவீதம்; இந்த ஆண்டில், 96.04 சதவீதம் பேர்
தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பிளஸ் 2 மறுதேர்வில் 180 பேர் தேர்ச்சி
பிளஸ்
2 மறுதேர்வு முடிவுகளும், நேற்று வெளியிடப்பட்டன. இதில், 180 பேர் மட்டுமே
தேர்ச்சி பெற்றனர். பிளஸ் 2 பொதுத் தேர்வு, மார்ச், 24ல் முடிந்தது. அதே
நாளன்று, கொரோனா பிரச்னையை தடுப்பதற்கான ஊரடங்கு அறிவிப்பு வெளியானது.
அதனால், சில மாணவர்கள் தேர்வில் பங்கேற்கவில்லை. இதையடுத்து, தேர்வை
தவறவிட்ட மாணவர்களுக்கு, ஜூலை, ௨௭ல், மறுதேர்வு நடந்தது. இதன் முடிவுகள்
நேற்று வெளியாகின.
மொத்தம், 147 பள்ளி மாணவர்கள் மற்றும் 372 தனி
தேர்வர்கள் என, 519 பேர் தேர்வில் பங்கேற்றுள்ளனர். அவர்களில், 92 பள்ளி
மாணவர்கள், 88 தனித் தேர்வர்கள் என, 180 பேர் மறுதேர்வு எழுதிய பாடத்தில்
தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த, 180 பேரில், 63 பேர் மட்டும், அனைத்து
பாடங்களிலும் தேர்ச்சி பெற்றுள்ளதாக, அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.