800 ஆண்டு காலம் ஆப்கானியரோடு யுத்தம், 200 ஆண்டுகாலம் ஆங்கிலேயரோடு போராட்டம், அடித்துக் கேட்டு, பின்னர் அமைதியாய்க் கேட்டு, அடி வாங்கிப் போராடி, ஒரு கட்டத்தில் வெள்ளையனுக்கும் மாபெரும் சிக்கல் ஏற்பட்டு சுதந்திரம் கிடைக்கும் நேரத்தில் கூட வஞ்சகமாய் உடைக்கப்பட்டு 2 துண்டுகளாக பிரிக்கப்பட்டு சிதைக்கப்பட்டது சுதந்திர இந்தியா.
பஞ்சத்திலும் வறுமையிலும்தான் இத்தேசம் பிறந்தது, இந்நாட்டின் வளத்தைத் தேடி வந்த பிரிட்டிஷ்காரன் ஒன்றுமில்லாமல்தான் இத்தேசத்தை விட்டுப் போனான்.
நாடு சுதந்திரம் பெறும் பொழுதே மாபெரும் கலவரம் குழப்பம், பிரிட்டிசார் விதைத்துச் சென்ற மதப் பிரிவினையின் உச்சம், என ரத்தத்தில் பிரிந்தது தேசம்.
73 வருடமாக எதையெலாம் கடந்து வந்தோம்?
சுதந்திரம் கொடுத்தாகிவிட்டது இன்னும் 2 ஆண்டில் இந்தியா 100 துண்டாகச் சிதறும் என்றார்கள், அதனை எல்லாம் எதிர்கொண்டு கடந்து உலகிற்கே அதிர்ச்சி கொடுத்தோம். நிலைத்தோம்.
தேசம் நிலைத்தது, பட்டேல் அந்த அதிசயத்தைச் செய்தார்
இந்தியர்களுக்கு ஜனநாயகம் தெரியாது, ஆளத் தெரியாது என்பதை எல்லாம் பொய்யாக்கி ஜனநாயக தேசமாக வளர்ந்தோம்.
பின்னர் காஷ்மீரைக் காட்டி 2 போர்கள், அதையும் தாங்கியது தேசம், நண்பனாய் நினைத்து ஐ.நா சபையில் நிரந்தர இடம்கொடு என வாதாடும் பொழுதே சுய உருவம் காட்டிற்று சீனா, ஆசிய நாடு ஒன்றிற்கு ஐ.நாவில் அந்தஸ்து என நாம் அவர்களுக்காய்ப் போராட , அவர்களோ ஆசியா தாதா நான் என நம் முதுகில் குத்திற்று.
அதையும் தாங்கி வளர்ந்தது இந்தியா, மறுபடியும் போர், இன்னும் ஏராளமான பிரச்சினைகள். ஆனால் இந்தியா அசரவில்லை.
மீண்டும் போர், அதையும் தாண்டி அந்நிய சக்திகளின் கலவர முயற்சிகள், மக்கள் தொகைப் பெருக்கம், எப்போதும் நேரடியாக கொஞ்சமும், மறைமுகமாக நிறையவும் தொல்லை கொடுக்கும் வல்லரசுகள்.
ஆளுக்கொரு கட்சி, அவனவனுக்கொரு கொள்கை, அவர்களுக்கென ஒரு வேலையற்ற கூட்டம், வெற்றுக் கூச்சல், வீண் ஆர்ப்பாட்டம் என அனுதினம் ஒரு பிரச்சினையைச் சந்தித்தாலும் வளர்கின்றது இந்தியா, குதிரை வேகமாக ஓடலாம், ஆனால் யானை எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும் பலமானது, அதுதான் இந்தியா.
சுதந்திரம் பெற்றபொழுது சுரண்டிப் போட்ட பாத்திரமாக ஏழை இந்தியாவினை விட்டுச் சென்றான் வெள்ளையன். கூடவே தீராத எதிரியையும் உருவாக்கிவிட்டுச் சென்றான்.
அந்த எதிரியான பாகிஸ்தானுக்கும் நஷ்ட ஈடு கொடுத்து திவாலில் இருந்தோம். தேர்தல் நடத்தக் கூடப் பணமில்லை.
இன்னொரு பக்கம் உலகம் இரண்டாம் உலகப்போரின் தாக்கத்தில் இருந்ததால் பெரும் மந்த நிலை.
அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டோம். ஐந்தாண்டுத் திட்டம் எனச் சொல்லி விவசாயம், பால், கடல் உணவு என உணவுக்கு முதலில் தன்னிறைவு அடைந்தோம்.
கல்விச் சாலைகள் கட்டி, அதற்காக பெரும் திட்டம் தீட்டிக் கல்வியில் உச்சம் பெற்றோம். இன்று உலகநாடுகள் ஐ.டி உட்பட பல தொழில்களில் இந்தியாவினை மதிக்கின்றது என்றால் அந்தக் கல்விதான் அடிப்படை.
அதை இப்பொழுது இன்னும் கூர்மையாக்கி இருக்கின்றோம்.
ஒரு துப்பாக்கி கூட செய்யத் தெரியாத தேசமாக இருந்தோம், கொஞ்சம் கொஞ்சமாக சுதாரித்தோம். இன்று உலகின் ராணுவபலம் பொருந்திய நாடுகளின் முதல் 5 இடங்களில் இருக்கின்றோம்.
சைக்கிளில் ராக்கெட் பாகங்களை கொண்டு சென்றுதான் விண்வெளி ஆராய்ச்சிகளைத் தொடங்கினோம், நமக்கு கைக்கொடுப்பார் இல்லை. தத்தித் திணறி தோல்வியுற்று படிப்படியாக முன்னேறி இன்று கிரையோஜனிக் என்ஜின் வரை செய்து அசத்தியிருக்கின்றோம்.
செவ்வாய்க் கிரகம் வரை இந்தியரால் தொட முடிகின்றது. செயற்கை கோள் என வானுக்குத் தாவ முடிகின்றது. ஆழ்கடல் வரை இந்திய நீர்மூழ்கிகள் தொட முடிகின்றது.
சிறிய தேசங்கள் முன்னேறுவது பெரிய விஷயம் அல்ல. இந்த மாபெரும் தேசம் இவ்வளவு பெரும் மக்களை வைத்துக் கொண்டு அதுவும் பல இன, மொழி, மக்களை வைத்துகொண்டு முன்னேறுவது வெகு சிரமம்.
இன்னொரு நாட்டிற்கு இது சாத்தியமே இல்லை. அதுவும் ஜனநாயக நாட்டுக்கு சாத்தியமே இல்லை. அந்த அதிசயத்தை நாம் செய்து கொண்டிருக்கின்றோம்.
இவ்வுலகில் உள்ள நாடுகளைக் கவனியுங்கள், பல நாடுகளில் மக்கள் வாழவே முடியாது. பொறுப்பற்ற அரசாங்கமும் மனிதத் தன்மை இல்லாப் போராட்டங்களும், இன்னும் பற்பல கொடுமைகளும் பெரும் அச்சுறுத்தலை மக்களுக்குக் கொடுக்கின்றது, உணவு இல்லை, கல்விச் சாலை இல்லை, ராணுவம் இல்லை, நீதிமன்றம் இல்லை, காவல் இல்லை, ஒன்றுமே இல்லை.
சிலநாடுகளில் ராணுவ ஆட்சி மட்டும் உண்டு, அது பெரும் ஆபத்து, சாப்பாட்டில் உப்புப் போடுவதைக் கூட ராணுவம்தான் தீர்மானிக்கும்.
ஒரு வகையில் நாமெல்லாம் அதிர்ஷ்டசாலிகள், பொருளாதாரம் ஏறும் இறங்கும். ஆனால் அமைதியாய் வாழ்கின்றோம், நிம்மதியாய் உறங்கி நம்பிக்கையாய் எழுகின்றோம், என்றாவது இங்கு வாழவே முடியாது என்று குடும்பத்தோடு அகதியாய் நாட்டை விட்டுக் கிளம்பியிருக்கின்றோமா? இல்லை.
இதுதான் சுதந்திர இந்தியாவின் வெற்றி.
எந்த நாட்டில் சிக்கல் இல்லை? இவ்வுலகின் எல்லா நாட்டிலும் சிக்கலும், வறுமையும் உண்டு, இந்தியாவிலும் அப்படிச் சில சர்ச்சைகளும் பிரச்சினைகளும் இருக்கலாம். அதற்காக இத்தேசம் மகா மோசம் என எவனாவது சொல்வான் ஆனால் அவனைக் கடலில் தள்ளுதல் நன்று.
ஆனானப்பட்ட ஐரோப்பிய தேசங்கள் அகதிகளை ஏற்கத் தயங்கியபொழுது நாமோ ஈழம், திபெத், வங்கம், மியான்மார் என எல்லா நாட்டு அகதிகளையும் அரவணைக்கின்றோம்.
இந்த மண்ணின் தர்மம் அந்த மானிட நேயத்தை இங்கு கொடுத்திருக்கின்றன. எந்த நாட்டு மக்களையும் நம்மால் காக்க முடிகின்றது, நிச்சயம் பெருமைப்பட வேண்டும்.
அது மோசம், இது மோசம், எல்லாமும் மோசம் எல்லாம் அசிங்கம் என 'குணா' பட கமலஹாசன் போல மோச ராகம் பாடும் பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும் ஒன்றை மறந்து விடுகின்றன.
சில நாடுகளில் முகநூல் கூட கிடையாது, சீனாவில் தடைசெய்யப்பட்ட ஊடகங்கள் சீன பெருஞ்சுவரையும் தாண்டும். இன்னும் சில நாடுகள் செவ்வாய் கிரகத்தில் மனிதனின் நிலைபோல, உலகைவிட்டே துண்டிக்கப்பட்டிருப்பார்கள். ஆனால் இந்தியா அப்படி அல்ல.
காந்தி முதல் மோடி வரை விளாச முடிகிறது, கார்ட்டூன்கள் போட்டு யாரையும் கலாய்க்க முடிகிறது. பெரும் ஊழலைக் கூட டீக்கடை பெஞ்சில் விவாதிக்க முடிகிறது.
இது எத்தனை நாடுகளில் சாத்தியம்?
ஏராளமான நாடுகளில் இதெல்லாம் நினைத்தே பார்க்க முடியாத விஷயங்கள். ஒரு வார்த்தை அரசினை விமர்சித்தாலே பிடுங்கி விடுவார்கள். காலத்திற்கும் சிறை அல்லது கல்லறை.
இத்தேசத்தில் எல்லா உரிமையும் மிக அதிகமாகவே கொடுக்கபட்டிருக்கின்றது.
நமது பொதுச் சுதந்திரத்திற்கு கேடு வரும்பொழுது கத்த முடிகிறது. கொடி பிடித்தோ அல்லது ஊர்வலமோ, சில நேரங்களில் வேறுவகையிலோ எதிர்ப்பினைக் காட்ட முடிகிறது, 5 வருடம் பொறுத்தால் ஆட்சியைத் தூக்கி எறிய முடிகிறது, காலத்திற்கும் ஆட்சியே மாறாத நாடுகளை நினைத்துப் பாருங்கள்??
இந்தியா கடந்த 73 ஆண்டுகளில் கடந்தபாதை மிகச் சிக்கலானது. எவ்வளவு இழப்புகள்? எவ்வளவு நெருக்கடிகள்? நிறைய துரோகங்கள். முக்கியமாக பெட்ரோல் முழுதும் இறக்குமதி, அதனையும் தாண்டி வளர்ந்திருக்கின்றோம் அல்லவா? அதுதான் சுதந்திர வெற்றி.
1960களில் ஒரு நுட்பத்தினையும் தரமாட்டேன் அல்லது தரவிடமாட்டேன் என அடம்பிடித்த அமெரிக்கா, தனது செயற்கைக் கோள்களை ஏவுவதற்கு இந்திய உதவியை நாடுகின்றது அல்லவா? அது வெற்றி.
இந்தியாவின் உதவியின்றி தெற்கு மற்றும் கிழக்கு ஆசியாவில் அமைதி சாத்தியமில்லை என உலகம் கருதுகின்றதல்லவா அது மாபெரும் வெற்றி. 1962 போல் அல்ல, நாம் அடித்தால் மறுநொடி இந்திய ஏவுகணைகள் ஷாங்காய் வரைத் தாக்கும் என சீனா யோசிக்கின்றது அல்லவா? அது மிகப்பெரிய வெற்றி.
1962ல் எந்த சீனாவிடம் பணிந்தோமோ, அதே சீனாவினை 2020ல் ஓடவிட்டு அடிக்கின்றோம் அல்லவா அதுதான் வெற்றி.
ஐ.நா சபையில் நிரந்தர உறுப்பினராகலாம் எனும் அளவிற்கு தனது முத்திரையினை உலக அரங்கில் பதித்திருக்கின்றது அல்லவா? இது தான் வளர்ச்சி.
சொன்னால் சொல்லிக் கொண்டே செல்லலாம், அவ்வளவு குறிப்பிடத்தக்க முன்னேற்றம். அதனாலதான் 1998ல் நடந்த கிழக்காசியப் பொருளாதார வீழ்ச்சி, 2008ல் நடந்த சிக்கல், இன்னும் பல உலகளாவிய மிரட்டல் இவை எல்லாம் இந்தியாவினைத் தாக்க முடியவில்லை.
காரணம் மெதுவாக நடந்தாலும் பலமிக்க யானை இது.
விவசாயத்தில் கொஞ்சம் கூடுதல் கவனம், நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளில் அதிக சிரத்தை, பெரும் செலவினை விழுங்கிக் கொண்டிருக்கும் ராணுவக் கருவிகள் இறக்குமதிக்குப் பதிலாக உள்நாட்டு தயாரிப்புகள், இன்னும் தொழிலதிபர்கள் மேல் கொஞ்சம் கட்டுப்பாடும் முறையான வரிவிதிப்பு இவைகளில் கவனம் செலுத்தினால் மட்டும் போதும்.
அந்த வரிவசூலினைச் சரியாக செய்தால் போதும். இந்தியா தன் பொற்காலத்தை எட்டும்
சிலர் அரசாங்கத்தை எதிர்ப்போம் என்ற பெயரில் நாட்டினை எதிர்ப்பது கண்டிக்கப்பட வேண்டிய விஷயம்.
நாடு வேறு, அரசாங்கம் வேறு.
இந்தியா அமைதியான நாடு, அருமையான நாடு அந்த அருமையை உணரவேண்டுமானால் சுதந்திர தினத்தன்று டிவியில் 20 வயது நடிகை 120 கோடிமக்களுக்கும் பேட்டியளிப்பார் அல்லது சினிமா குப்பைகள் அல்லது பட்டிமன்ற அரட்டைகள் ஓடிக் கொண்டிருக்கும்.
அல்லது சாராய அரசியல்வாதிகள், ஊழல்வாதிகள் உணர்ச்சிமிக்க சுதந்திரதின வாழ்த்துக்களைச் சொல்வார்கள். உடனே அலைவரிசையை மாற்றிவிட்டு
பல குழப்பமான நாட்டு அரசுகளையும், சிக்கலான வாழ்க்கை வாழும் வடகொரியா, சிரியா போன்ற நாடுகளையும், பலமான அரசுகள் இல்லாததால் கொடூரமான தீவிரவாதத்திற்கு பலியாகும் நாடுகளையும் பற்றிப் பாருங்கள்.
எத்தனை கொடூர அரசுகள், எத்தனை காட்டுமிராண்டித் தனங்கள், போதைக் கும்பல்கள் ஆளும் நாடுகள், கற்பனைக்கும் எட்டாத கட்டுப்பாடுகள், அட்டகாசங்கள்.
அம்மக்களின் அழுகுரலும், பசியால் கதறும் பிஞ்சுகளின் கூக்குரலும் கேளுங்கள். தானாக உங்கள் காதுகளில் தேசிய கீதம் ஒலிக்கும், கைகள் தேசியக் கொடியை வணங்கும்.
அப்படி ஒரு அற்புதமான நாடு இது, அகதியாய் சுதந்திரப் போராட்டக் காலத்தில் கூட ஒருவரும் வெளியேறாத நாடு இது, இன்றும் சர்வ சுதந்திரமாய் , மகிழ்வாய் நம்மால் வாழ முடிகின்றது.
இந்தியா ஒரு நாடு மட்டுமல்ல, ஒரு மாபெரும் அதிசயமும் கூட. பல இனங்கள், மதங்கள்,கலாச்சாரம் எனக் கலந்து வாழும் அற்புதமான ஒரு அமைப்பு, இந்தியாவினைத் தவிர உலகில் எந்த நாட்டிற்கும் அது சாத்தியமானதே அல்ல.
அந்த அற்புதமான நாட்டின் சுதந்திர தின வாழ்த்துக்களைத் தெரிவித்து கொள்வதில் பெருமை அடைகின்றேன்.
இந்நாட்டிற்குக் காலம் ஒவ்வொரு தலைவனை ஒவ்வொரு காலத்திலும் கொடுத்துக் கொண்டே இருக்கின்றது. அன்றைய சிக்கலான காலத்தில் நேரு, லால் பகதூர் சாஸ்திரி, ராணுவப் போட்டியான காலத்தில் இந்திரா, ராஜீவ் சோவியத் வீழ்ந்த பொருளாதாரச் சவலான காலத்தில் நரசிம்மராவ், மன்மோகன் சிங், இன்று ஒரே இந்தியா என்ற உணர்வு வரவேண்டிய நேரத்தில் மோடி என யாராவது வந்து இந்த தேசத்தைத் தாங்குகின்றார்கள்.
மோடி மீது ஆயிரம் சர்ச்சை இருக்கலாம். ஆனால் மாநில அரசியல் வலுப் பெற்று அதனால் இந்த தேசமே ஒரு மாதிரி சென்ற நிலையில், காங்கிரஸ் வலுவிழந்த நிலையில் நாடு முழுக்க அறியப்படும் தலைவனாக, ஒரே இந்தியாவின் இரும்புத் தலைவனாக , பிரதமராக மோடி அமர்ந்திருப்பது இந்நாட்டிற்கு நல்லது.
சுதந்திரத்திற்காக அரும்பாடுபட்ட காந்தி, நேதாஜி, கோகலே, வ.உ.சி., குமரன், திலகர், லஜபதி ராய் போன்ற ஈடிணையற்ற அந்த அனைத்துத் தியாகிகளையும், அதன் பின் இத்தேசத்தை காத்து நின்ற பட்டேல் போன்ற தலைவர்களையும், கல்விக் கண் திறந்த காமராஜரையும், விஞ்ஞானத்தில் இத்தேசத்தைக் காத்து நின்ற பாபா, சதீஷ்தவான், அப்துல் கலாம் போன்ற விஞ்ஞானிகளையும்
யுத்தத்தில் இத்தேசத்தை காத்து நின்ற கரியப்பா, மோனக்ஷா போன்ற தளபதிகளையும் , எல்லைக் காப்பில் உயிரிழந்த எண்ணற்ற வீரர்களுக்கும் நன்றிகளை கண்ணீர் மல்கத் தெரிவித்தபடிச் சொல்கின்றோம்.
வந்தே மாதரம், வாழ்க பாரதம்.
உலகின் மாபெரும் அதிசயமும், பெரும் அற்புதமுமான இந்த தேசத்தின் 73ம் சுதந்திர தின விழாவினை இத்தேசம் மிக உற்சாகமாகக் கொண்டாடட்டும்.
இனிவரும் காலம் இந்தியர் காலமாய் உலகில் மலரட்டும்.
இருவருடமாக தேசம் பல விஷயங்களை செய்து அசத்துகின்றது, பாகிஸ்தானை ஒடுக்கி வைத்திருப்பது, காஷ்மீரை இந்தியாவோடு இணைத்து நீண்டகாலச் சிக்கலை முடித்திருப்பதெல்லாம் மிக மிக முக்கியமான திருப்பங்கள்..
அதைவிட முக்கியம் காஷ்மீரில் நிலவும் அமைதி
சீனாவினை விரட்டி அடித்து இன்று லடாக்கில் உலகமே அதிரும் வண்ணம் வந்தே மாதரம் என முழங்கி கொண்டிருக்கின்றது இந்தியா, உலகம் இந்தியாவின் தர்மத்தைப் புரிந்து கொண்டது.
உலகின் பலம் வாய்ந்த நாடாக இன்று இந்தியா மாறி நிற்பது மாபெரும் ஆச்சரியம், எல்லா நாடுகளும் இந்திய உறவினைத் தேடி நிற்பதே அதற்கு சான்று.
50 ஆண்டுகாலச் சிக்கல் தீரும்பொழுது, 70 ஆண்டுகாலச் சிக்கல் தீரும்பொழுது, 500 ஆண்டுகாலச் சிக்கலான ராமர்கோவிலும் தீர்ந்து ராமபிரானுக்கு ஆலயம் எழும்பிற்று என்பது மகா முக்கியமான காலகட்டம், இந்திய மண் சிலிர்த்து தன் அடையாளத்தை மீட்ட காலகட்டம்
அந்த அற்புதமான காலகட்டத்தில் நின்றுகொண்டு, இந்த அருமையான நாட்டின் குடிமக்கள் எல்லோருக்கும் கம்பீரமான சுதந்திர தின வாழ்த்துக்களைத் தெரிவிப்போம்
ஜெய் ஹிந்துஸ்தானம்..
"கம்பத்தின் கீழ் நிற்றல் காணீர் - எங்கும்
காணரும் வீரர் பெருந்திருக் கூட்டம்
நம்பற் குரியர் அவ்வீரர் - தங்கள்
நல்லுயிர் ஈந்தும் கொடியினைக் காப்பார்..