சட்டீஸ்கர் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால்
வீட்டை இழந்த பழங்குடியின சிறுமி மழையில் சேதமடைந்த தன் புத்தகங்களை
பார்த்து கதறி அழும் சிறுமிக்கு பல முனைகளில் இருந்தும் உதவிகள் குவிந்து
வருகிறது.
சட்டீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டம் மாவோயிஸ்ட்களால் அதிக
பாதிப்புக்குள்ளான பகுதி. இங்குள்ள, கோமலா என்ற கிராமத்தைச் சேர்ந்த
பழங்குடியின சிறுமி அஞ்சலி அங்குள்ள பள்ளியில் படித்து வந்தார்.
மாவோயிஸ்ட்டுகள் பூமியில் பெண் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதே பெரிய
விஷயம். படிப்பின் மீதுள்ள வற்றாத ஆர்வத்தினால் சிறுமி ஆர்வத்துடன்
பள்ளிக்கு சென்று படித்தார். நர்ஸ் ஆகி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்
என்பதே அஞ்சலியின் லட்சியம்.
இந்த நிலையில், கடந்த 5 நாள்களாக பிஜப்பூர் மாவட்டத்தில் பேய் மழை
பெய்தது. சிறுமி அஞ்சலி அவரின் பெற்றோர் பாதுகாப்பான இடத்துக்கு
அப்புறப்படுதப்பட்டு முகாமில் தங்க வைக்கப்பட்டனர். மழை ஓய்ந்த பிறகு,
அஞ்சலி வீட்டுக்கு வந்த போது, வீடு முற்றிலும் உடைந்து போய் கிடந்தது.
வீட்டிலுள்ள பொருள்களும் சேதமடைந்து கிடந்தன. ஆனால், சிறுமி அஞ்சலி
சேதமடைந்து கிடந்த மற்ற பொருள்களை பார்த்து அழவில்லை....கதறவில்லை...
ஆனால், தண்ணீரில் நனைந்து கிடந்த புத்தகங்களை கண்டதும் துடித்துப் போனார்.
பிறகு, கதறி அழுதவாறே சேதமடைந்த புத்தகங்களை அஞ்சலி எடுக்கும் துயரக்
காட்சியை பத்திரிகையாளர் முகேஷ் சந்திராகர் அவருக்கு தெரியாமலேயே வீடியோவாக
பதிவு செய்தார். பிறகு, அஞ்சலிக்கு உதவிட கோரி அந்த வீடியோவை முகேஷ்
சந்திராகர் ஃபேஸ்புக்கில் பதிவிட ஆதரவும் ஆறுதலும் குவிந்து வருகிறது.
உடனடியாக அஞ்சலிக்கு உதவிட நடவடிக்கை எடுக்கும்படி சட்டீஸ்கர் மாநில
முதல்வர் Bhupesh Baghel பிஜப்பூர் மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தவிட்டார்.
அடுத்த சில மணி நேரங்களில் அஞ்சலியின் வீட்டை சீரமைக்க 1.1 லட்ச ரூபாய்
மாவட்ட நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டது. நர்ஸிங் கல்லூரியில் சேர்ந்து
அஞ்சலி படிக்கவும் மாவட்ட நிர்வாகம் உதவி அளிக்கும் என்றும் உத்திரவாதமும்
அளிக்கப்பட்டது.
அஞ்சலி சேதமடைந்த புத்தகத்தை பார்த்து சிறுமி அழும் வீடியோவை நடிகர்
சோனு சூட்டும் பார்த்துள்ளார். கமாண்டில் 'கண்ணீரை துடையுங்கள் சகோதரி
உங்கள் வீடு, புத்தகம் எல்லாமே புதியதாக கிடைக்கும் '' என்று ஆறுதல்
கூறியிருந்தார். சோனு சூட் அப்படி கூறி வாய் மூடியிருக்கவில்லை....
அஞ்சலிக்கு எல்லாமே புதியதாக கிடைத்து விட்டது.








