மேனிலைப்
பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின் போது இட ஒதுக்கீடு விதிகளை பின்பற்ற
வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து
பள்ளிக் கல்வி இயக்குநர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: மேனிலைப் பள்ளிகளில்
மாணவர் சேர்க்கையின்போது, இட ஒதுக்கீடு தொடர்பான சட்டங்களின் படி
2020-2021ம் கல்வி ஆண்டிலும் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும். மாநிலத்தின்
அதிகார வரம்புக்குள் செயல்படும் அனைத்துவகைப் பள்ளிகளிலும் (சிறுபான்மை
கல்வி நிறுவனங்கள் நீங்கலாக) பழங்குடியினர், ஆதிதிராவிடர் மற்றும்
பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு என்பது
பொதுப்பிரிவுக்கு 31 சதவீதம், பழங்குடியினர் 1 சதவீதம், ஆதி திராவிடர்
பிரிவில் 18 சதவீதம்( ஆதிதிராவிட அருந்ததியினர் இருந்தால் 18 சதவீதத்தில்
இருந்து 3 சதவீதம் முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கீடு செய்ய வேண்டும்),
மிகவும்
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினருக்கு 20 சதவீதம்,
பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர் 3.5 சதவீதம், பிற்படுத்தப்பட்டோர் 26.5
சதவீதம் ஒதுக்கப்பட வேண்டும். இதன்படி, பொதுப்பிரிவினருக்கான 31 சதவீத
இடத்துக்கான பட்டியல் முதலில் தயாரிக்க வேண்டும். இதில் மாணவர்கள் பெற்ற
மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே முன்னுரிமை வழங்கவும், பொதுப்பிரிவினர்,
ஆதிதிராவிடர், பழங்குடியினர்,பிற்படுத்தப்பட்ட பிரிவினர் என்ற எந்தவித
பாகுபாடின்றி தயாரிக்க அறிவுறுதப்படுகிறது. அதன் பிறகு அந்தந்த
பிரிவினருக்கான பட்டியல் தயாரிக்க வேண்டும். மேற்குறிப்பிட்ட அனைத்து
வகைப் பள்ளிகளிலும் பாடப் பிரிவு வாரியாக(Group-Wise) இட ஒதுக்கீடு
வழங்கப்பட வேண்டும்.