புதிய கல்விக் கொள்கையை செயல்படுத்தும் வகையில், 'ஸ்டார்ஸ்' எனப்படும்
மாநிலங்களில் பள்ளிக் கல்வி முறையை வலுப்படுத்தும் திட்டத்துக்கு, மத்திய
அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. உலக வங்கி மற்றும் ஆசிய வங்கி நிதி
உதவியுடன் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
மத்திய அமைச்சரவை கூட்டம், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், நேற்று நடந்தது.
இதில்
எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய செய்தி,
ஒலிபரப்பு துறை அமைச்சருமான பிரகாஷ் ஜாவடேகர் கூறியதாவது:புதிய கல்விக்
கொள்கையை அமல்படுத்தும் வகையில், 'ஸ்டார்ஸ்' எனப்படும் மாநிலங்களில் கற்றல்
மற்றும் அதன்படி வெளிப்பாடுகள் அடிப்படையிலான கற்பிக்கும் முறையை
வலுப்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தின் கீழ்,
இதுவரை மனப்பாடம் செய்து கற்கும் முறைக்கு மாற்றாக, மாணவர்கள் புரிந்து,
அறிந்து கொள்ளும் வகையில் பாடங்கள் கற்பிக்கப்படும்.
துவக்கநிலை
கல்வியில், 3 - 8 வயதுடைய மாணவர் கள், பாடங்களை புரிந்து கொண்டு கற்றுக்
கொள்ள வும், மொழிகளை கற்கவும் முக்கியத்துவம் தரப்படும்.இதற்கேற்ப
ஆசிரியர்களை தயார்படுத்தியும், ஆசிரியர் பயிற்சி முறையில் மாற்றமும்
செய்யப்பட வேண்டும். மாணவர்கள் சிறந்த முறையில் கற்பதுடன், கற்றலின்
வெளிப்பாடும் முக்கியம். அதற்கேற்ற வகையில் கற்பித்தல் முறையில் மாற்றம்
செய்யப்படும்.
இதற்கு தயாராகும் வகையில், ஸ்டார்ஸ்
திட்டத்தின் கீழ், குறிப்பிட்ட சில மாநிலங்களில் கல்வி முறை
வலுப்படுத்தப்பட உள்ளது. உலக வங்கியின், 3,700 கோடி ரூபாய் நிதியுதவியுடன்
கூடிய, 5,718 கோடி ரூபாய் மதிப்பில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட
உள்ளது.இது, ஹிமாச்சல பிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா,
கேரளா, ஒடிசா மாநிலங்களில் செயல்படுத்தப்படும்.
மாநில அரசுகளும்
இந்த திட்டத்தில் உரிய பங்கை செலவிடும்.இதுபோல், ஆசிய வங்கியின் நிதி
உதவியுடன், குஜராத், ஜார்க்கண்ட், உத்தரகண்ட், அசாம், தமிழகத்திலும் இந்த
ஸ்டார்ஸ் திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக, 5,800 கோடி ரூபாய்
ஒதுக்கப்பட்டுள்ளது.இந்த திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம், நாட்டின் கல்வி
முறையில் புதிய மறுமலர்ச்சி ஏற்படும். உலக நாடுகளுடன் போட்டிபோடும் திறன்
நம் மாணவர்களுக்கு கிடைக்கும். இத்துடன், தேசிய அளவிலான மதிப்பீட்டு
மையமான, 'பராக்' என்ற தன்னாட்சி அமைப்பை, கல்வி அமைச்சகத்தின் பள்ளிக்
கல்வி துறையின் கீழ் அமைக்கவும், மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.