புதுடில்லி : சமூக வலைதளங்களை சிறுவர், சிறுமியர் பயன்படுத்துவதை
கட்டுப்படுத்த, வயது வரம்பை நிர்ணயிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு
தொடர்பாக விளக்கம் கேட்டு, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம், 'நோட்டீஸ்'
அனுப்பியுள்ளது.
சட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களான, ஸ்கந்த்
பாஜ்பாய், அப்யுதயா மிஸ்ரா ஆகியோர், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள
பொது நல மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:சமூக வலைதளங்களை, விளம்பரம் செய்யும்
தளமாக பலரும் மாற்றி வருகின்றனர். ஆபாச படங்கள், வீடியோக்களை தொடர்ந்து
வெளியிட்டு வருகின்றனர்.சமூக வலைதளங்களை பயன்படுத்த, நம் நாட்டில் வயது
வரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.

அதனால், சமூக வலைதளங்களை பயன்படுத்த, வயது வரம்பு நிர்ணயிக்க வேண்டும். இது தொடர்பாக, சரியான நெறிமுறைகளை உருவாக்க, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு, அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு, தலைமை நீதிபதி, எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள், இது தொடர்பாக விளக்கம் கேட்டு, மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.