
சென்னை : மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய மருத்துவர்கள் தயாராக இருக்க வேண்டும் என்று அரசு மருத்துவர்களுக்கு குடும்ப நலத்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் வரும் 16ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க தமிழக அரசு அனுமதியளித்திருந்தது. கொரோனா கட்டுக்குள் வராமல் பள்ளி, கல்லூரிகளை திறக்கக்கூடாது, அரசு தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கல்வியாளர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை வைத்தனர்.
இதைத் தொடர்ந்து, அமைச்சர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலாசனைக்கு பிறகு, தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் பெற்றோர்களின் கருத்துக் கேட்பு கூட்டம் வரும் 9ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதில், மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டு, தங்களது கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என்றும், கலந்துகொள்ள இயலாதவர்கள் கடிதம் மூலமாக தங்களின் கருத்துகளைத் தெரிவிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவின் அடிப்படையில் அந்தந்தப் பள்ளிகளை திறப்பது குறித்து அரசால் முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய மருத்துவர்கள் தயாராக இருக்க வேண்டும் என்று அரசு மருத்துவர்களுக்கு குடும்ப நலத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், வைட்டமின் மாத்திரைகளை தயாராக வைத்திருக்க வேண்டும் என்றும், பள்ளிகள் அனைத்தும் கிருமி நாசினி வழங்க ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.








