பள்ளிகள் திறப்பது தாமதமானால்
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தொடர்ந்து சிறப்பு பயிற்சி
அளிக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கொரோனா
ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவித்த நிலையில் நவம்பர் 16-ஆம் தேதி முதல்
பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என்றும், அதிலும் 9-12 ஆம் வகுப்பு
மாணவர்களுக்கு மட்டுமே வகுப்புகள் நடைபெறும் என்றும் தமிழக அரசு
அறிவித்திருந்தது. இதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில்
பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே கருத்து கேட்பு கூட்டம் நடத்த உள்ளதாக
பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார் .
அரசு
பள்ளிகளிலும், தனியார் பள்ளிகளிலும் பள்ளிகள் திறப்பது குறித்த கருத்து
கேட்பு கூட்டம் நடைபெறும் . அது மட்டுமின்றி பள்ளிகள் திறப்பு குறித்து
பெற்றோர்களின் கருத்தும் கேட்ட பின்னரே முடிவு எடுக்கப்படும் என்று
அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருந்தார். இந்த நிலையில் இன்று ஈரோடு
மாவட்டம் ஒட்டர்கரட்டுப் பாளையத்தில் உள்ள 583 பால் உற்பத்தியாளர்களுக்கு
தீபாவளி போனஸ் தொகையை வழங்கிய பின்னர் அமைச்சர் செங்கோட்டையன்
செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது
5லட்சத்து 18 ஆயிரம் பேர் தனியார் பள்ளிகளில் இருந்து விலகி அரசு
பள்ளிகளில் இந்தாண்டு சேர்ந்துள்ளதாக கூறிய அவர் பெற்றோர்கள், மாணவர்கள்
உள்ளிட்ட அனைவரின் கருத்துகளை வைத்து தான் பள்ளிகள் திறப்பது குறித்து
முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்தார் . ஒருவேளை கருத்து கேட்பு
கூட்டத்திற்கு பின்னர், பள்ளிகளை திறப்பதற்கு தாமதமானால் பொது தேர்வு எழுத
தயாராகும் மாணவர்களுக்கு தொடர்ந்து சிறப்பு பயிற்சி அளிக்கப்படும் என்று
அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.