சென்னை:
மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்றுள்ள மாணவர்களின் இருப்பிட சான்றிதழை
கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. 34 மாணவர்களின் பெயர் தெலுங்கானா
மற்றும் தமிழ்நாடு ரேங்க் பட்டியலில் இடம்பெற்று முறைகேடு அம்பலமான
நிலையில் 5 பேர் கொண்ட கண்காணிப்புக் குழு அமைத்து தமிழக அரசு
உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று
வருகிறது.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவிகித உள் ஒதுக்கீடு இந்த ஆண்டு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்ட நிலையில், முதலாமாண்டு மாணவர்களுக்கான மருத்துவ கலந்தாய்வு இன்று சென்னை நேரு ஸ்டேடியத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக இன்று அரசு பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது.
நாமக்கல்லைச் சேர்ந்த மாணவி ஒருவர் போலி இருப்பிடச் சான்றிதழ் வழங்கி தமிழ்நாடு மற்றும் கேரள மாநில கலந்தாய்வுக்கு விண்ணப்பித்து 2 தரவரிசை பட்டியலிலும் இடம் பெற்றிருப்பதாகத் தகவல்கள் வெளியானது. மாணவியின் தந்தை நாங்கள் முறைகேடு எதுவும் செய்யவில்லை தெரிவித்தார். இது குறித்து சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், 'ஒரு மாணவர் இரண்டு மாநிலங்களில் விண்ணப்பிப்பதில் தவறில்லை.
இரண்டு மாநிலங்களிலும் அந்தந்த மாநில இருப்பிடச் சான்றிதழ் வழங்கினால் தான் தவறு' என்று தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து பல்வேறு கட்சித்தலைவர்கள், மாணவர்கள் என பலரும் இதுகுறித்து தமிழக அரசு விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.