நாடு முழுவதும் அதிக வாடிக்கையாளர்களை கொண்டுள்ள ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 2022 நிதியாண்டில் மிகக்குறைந்த விலையில் 5ஜி மொபைல் ஃபோனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
அதற்காக பல கோடி முதலீடு செய்து ஸ்பெக்ட்ரம், 5ஜி கருவிகளை வாங்கி வைத்துள்ளது. மேலும் குவால்கம் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்ட 5ஜி தொழில்நுட்பமும் தயாராக உள்ளது.
குறுகிய காலகட்டத்தில் பெரிய அளவிலான வர்த்தகத்தையும் வருமானத்தையும் பெற வேண்டும் என்பதற்காக குறைந்த விலையில் 5ஜி ஆன்ட்ராய்டு போன் விற்பனை செய்ய அம்பானி திட்டமிட்டுள்ளார்.
இந்தியாவில் சுமார் 300 மில்லியன் வாடிக்கையாளர்கள் இன்னமும் 2ஜி சேவை தளத்திலேயே உள்ளனர் . அவர்களை நேரடியாக 5ஜி பிரிவுக்குள் கொண்டுவர ஜியோ திட்டமிட்டு வருகிறது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும், கூகுளும் கை கோர்த்துள்ள நிலையில், அவர்கள் கூட்டணியில் மலிவான மொபைல் போனை உருவாக்குவதற்கான ஆய்வுப் பணிகள் மே மாதத்தில் முடியும் என கூறப்படுகிறது.
அந்த முயற்சி வெற்றி அடைந்ததும் உற்பத்தி பணிகள் துவங்கி விரைவில் விலை குறைவான 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆகஸ்ட் - செப்டம்பர் மாதங்களில் நடக்கும் ரிலையன்ஸ் குழுமத்தின் வருடாந்திர கூட்டத்தில், மலிவு விலை 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்ய அதிகப்படியான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.









