பொதுப் பள்ளிக்கான மாநில மேடை பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு வெளியிட்டுள்ள அறிக்கை: 2021 -2022 கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட அனைத்து மருத்துவ இளங்கலைப் பட்ட மாணவர் சேர்க்கைக்கான தேர்வு என்பதுடன் இளங்கலை செவிலியர் பிஎஸ்சி நர்சிங் படிப்பு, இளங்கலை உயிரி அறிவியல் பிஎஸ்சி லைஃப் சைன்ஸ் ஆகியவற்றிற்கும் இந்தத் தேர்வு எடுத்துக் கொள்ளப்படலாம் என்று குறிப்பிட்டப்பட்டுள்ளது. எழை எளிய மாணவர்களின் மருத்துவக் கனவை பறித்தது போதாதென்று, செவிலியர் படிப்பு தொடங்கி இனி எல்லாப் பட்டப் படிப்பிற்கும் நீட் என்பது சமூக நீதிக்கும், சமகற்றல் வாய்ப்பிற்கும் எதிரானது.
தேசியத் தேர்வு முகமை, 2021-22 கல்வியாண்டிற்கான நீட் அறிவிப்பை உடனே திரும்பப் பெற வேண்டும். அனைத்துப் பட்டப் படிப்பிற்கும் மாணவர்கள் சேர்க்கையை மேல்நிலைப் பள்ளி மதிப்பீடு அடிப்படையில் தான் நிகழ்த்த வேண்டும். தமிழ் நாடு மாணவர்களின் கல்வி நலனை காத்திட, சட்டப் பேரவை தேர்தல் முடிந்து, அமையப் போகும் அடுத்த சட்டப் பேரவை தேசியக் கல்விக் கொள்கை 2020 குறித்து முழுமையான விவாதம் நடத்தும் வரை அதன் நடைமுறை செயல்பாடுகள் அனைத்தையும் தமிழ்நாடு அரசு நிறுத்தி வைக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.