தமிழகத்தில் மாணவர்களின் இடைநிற்றலை தவிர்க்க, அரசுப் பள்ளிகளில் இலவச சத்துணவுத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் சராசரியாக 50 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் இத்திட்டத்துக்காக ரூ.800 கோடி வரை தமிழக அரசு செலவிடுகிறது.
தற்போது பள்ளிகள் மூடியுள்ளதால் மாணவர்களுக்கு அரசின் சார்பில் அரிசி உள்ளிட்ட உலர்உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனாலும், குடும்ப பொருளாதார சூழலால் மாணவர்களின் இடைநிற்றலும் அதிகரித்துள்ளது.
இதை தவிர்க்க சத்துணவில்முட்டையுடன் சேர்த்து ரொட்டித்துண்டு வழங்க உள்ளதாக தகவல்வெளியாகி உள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் சிலர் கூறும்போது, “கரோனா பரவலின் தாக்கத்தால் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்கள் வேலைக்கு செல்லவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இந்த நிலையால் பள்ளிகளில் இடைநிற்றல் கணிசமாக உயர்வதுடன், குழந்தைகளின் எதிர்காலமும் பாதிக்கப்படுகிறது. இதை தவிர்க்கும் வகையில் சத்துணவு திட்டத்தில் முட்டையுடன் சேர்த்து, தன்னார்வு தொண்டுநிறுவனங்கள் மூலம் ரொட்டிவழங்கப்பட உள்ளது. இதற்கானஅறிவிப்பு நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் வெளியாகும்” என்று தெரிவித்தனர்.